ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்

பதிகங்கள்

Photo

சாம்பவி நந்தி தன்னருட் பார்வையாம்
ஆம்பவ மில்லா அருட்பாணி முத்திரை;
ஓம்பயில் வோங்கிய உண்மைஅக் கேசரி;
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத்தி ரையே.

English Meaning:
Sambhavi Mudra brings Grace and Kechari Jnana

Sambhavi Mudra brings Nandi`s glance
In Grace abounding and birth ending
Kechari true where Aum is in silence chanted
Is the Mudra that divine Jnana brings;
That the one I practise, as Natha (Guru) divine.
Tamil Meaning:
சாம்பவி முத்திரையாவது தனது கண்களைச் சிவனது கண்களாகப் பாவித்துக்கொண்டு, நோக்குவன எவற்றையும் அந்தப் பாவனையோடே நோக்குதலாம். இதனால் உலகப் பொருள்கள் மாயையாகாது அருள்மயமாக, தனது ஞானேச்சாக் கிரியைகளும் சிவனது ஞானேச்சாக் கிரியைகளில் அடங்கி நிற்கும். இனித் தன்னைச் சிவனாகப் பாவித்து வணங்குவோரையும் அருளே தனுவாய் நின்று சிவமாகச் செய்யும்.
இனிக் கேசரி முத்திரையாவது, பிறப்பில்லாமைக்கு ஏது வாகிய சின்முத்திரைக் கையுடன் பிரணவ யோகத்தில் பயில்வதாகிய ஞானயோக நிலையாம். இவை இரண்டுமே நாம் நாள்தோறும் பயில்கின்ற சிவஞான முத்திரைகளாகும்.
Special Remark:
பிறவியை அறுப்பது திருவடி ஞானமேயாகையால் அதனை, ``ஆம் பவம் இல்லா அருள்`` என்றார். அருட்பாணி - அருளைக் குறிக்கின்ற கை. `முத்திரையோடு` என உருபு விரிக்க. திருவடியுணர்வைக் குறிப்பது சின்முத்திரை ஒன்றேயாதல் அறிக.
இதனால், மேல் பெயர் கூறப்பட்ட இரு முத்திரைகளின் இயல்பு கூறப்பட்டது.