ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்

பதிகங்கள்

Photo

நாலாறு மாறவே நண்ணிய முத்திரைப்
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்க்கக்
கோலா கலங்கெட்டுக் கூடும்நன் முத்தியே.

English Meaning:
Significance of Mudra

The Mudra is to transcend avastas eleven,
Fix awareness on Silent Letter Pranava (Aum)
That the Way is;
And reach the Holy Feet of Nandi;
And all desires worldly quelled
You attain Mukti divine.
Tamil Meaning:
நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பும் நீங்குதற் பொருட்டு நல்லோர் தங்கள் உள்ளங்களை அவற்றிற்கு ஏற்பப் பொருந்திய முத்திரைகளாகிய பல வகைப்பட்ட மொழிகளிலே பொருத்தி, அவ்வாற்றால் பரம்பொருளாகிய சிவனடிமேல் செல்லும் படி செலுத்தினால், உலக ஆரவாரங்கள் அடங்கி, மேலான வீடுபேறு உண்டாகும்.
Special Remark:
``நால், ஆறு`` என்பன தொகைக் குறிப்பாய் அத்துணையான தோற்றங்களையும், பிறப்புக்களையும் குறித்தன. `நாலாகிய ஏழ்` எனவும், `முத்திரையாகிய மோன மொழி` எனவும் விரிக்க. முத்திரைகள் வாய்திறந்து பேசாமலே கருத்தை விளக்குதலால் அவற்றை ``மோன மொழி`` என்றார். பதிவித்து உய்த்தற்கு, `உள்ளம்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ``உள்ளம்`` என்றது, அதன் கண் எழும் கருத்துக்களை. ``பதிவித்து`` என்றது, `வாய்திறவாமல்` எனவும், கருத்துக்கள் `அவத்தின் பாலவாகாது, சிவத்தின் பாலவே ஆகல் வேண்டும்` எனவும் கூறியவாறு. மேலான வடு பரமுத்தி.
இதனால், முத்திரைகளது பயன் கூறுமுகத்தால் அவை அடியவர்க்கு வேண்டப்படுதல் கூறப்பட்டது. வாய்திறவாமையை வேண்டியது, `அதனால் உலகியல் தொடர்பு குன்றுதல் பற்றி` என்பதனை, ``கோலாகலம் கெட்டு`` என்பதனால் கூறினார்.