ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்

பதிகங்கள்

Photo

பராபரன் எந்தை பனிமதி சூடி
தராபரன் தன்அடி யார்மனக் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
மராமரன் மன்னி மனத்துறைந் தானே.

English Meaning:
Lord is Sovereign Supreme

The Supreme Parapara is He;
My Father Divine;
He sports the crescent moon;
He rules the universe;
Into the heart`s temple of His devotees too he reigns
He the Hara to whom the Immortals in worship bow
He in my heart resides firm.
Tamil Meaning:
மேற்கூறியவாறு என்னை ஆட்கொண்டபின் இறை யியல்பு அனைத்தையும் உடைய சிவன் எனது உயிரையேதான் இருக்கும் இடமாகக் கொண்டான்.
Special Remark:
`அதனால் எனது உயிர் ஆத்தும லிங்கமாயிற்று` என்பது குறிப்பெச்சம். பரன் + அபரன் = பராபரன். `மேலும், கீழுமாய் நிற்பவன்` என்பது பொருள். ``மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க`` - எனத் திருவாசகத்துள்ளும் வந்தது. (தி.8 திருவண்டப்பகுதி, 50) `இவ்வாற்றால் என் உயிரையும் இடமாகக் கொள்ளுதல் அவனுக்கு இயல்பாயிற்று` என்றபடி. எந்தை - அடைந்தவர் மேல் தந்தை போலும் அருள் உடையவன். மதி சூடுதல் சார்ந்தாரைக் காப்பவன் ஆதலைக் குறிப்பது. ``தராபரன்`` என்றது மக்களை ஆட்கொள்ளுதலையும், ``தேவர்கள் மன்னும்`` என்றது தேவர்களை ஆட்கொள்ளுதலையும் குறித்தவாறு. `அடியார்களது மனத்திலும், சிரத்திலும் வீற்றிருப்பவன் எனது மனத்திலும் நீங்காது இருப்பவன் ஆயினான்` என்பது அவனது பேரருளை வியந்தவாறு. `சிரபரன்` என்பது எதுகை நோக்கி நீண்டது. இங்கு உள்ள ``பரன்`` என்பதை, ``கோயில்`` என்பதனோடும் கூட்டுக. ``மன்னும்`` என்பது முற்று. `மராமரன் போல மன்னி உறைந்தான்` என்க. மரன் - மரம். மரங்களில் மிக்க வயிரம் உடையது மராமரம் ஆதலின், அஃது அகலாது இருத்தற்கு உவமையாயிற்று.