ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்

பதிகங்கள்

Photo

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவதே பீடம் நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கருஐந்தும் செய்யும்அவ் வைந்தே.

English Meaning:
Linga Comprises both Bindu and Nada

Bindu and Nada together form Linga
Bindu is the Pedestal, Nada the Linga
With them two as support divine
The Five gods arose, their Five functions to perform.
Tamil Meaning:
சத்தி சிவங்கட்கு வடிவமாய் நிற்கின்ற விந்து நாதங்களின் வடிவமே இலிங்க வடிவம். அவற்றுள் விந்துவே பீடமாயும், நாதமே இலிங்கமாயும் நிற்கும். அந்த விந்து நாதங்களை முதலாகக் கொண்டு தோன்றிய `சிவன் சத்தி, சதாசிவன், மகேசுரன், வித்தியேசுர` என்னும் முதல்வர் ஐவரும் முறையே, சிவம், சத்தி, சதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை என்னும் சுத்த தத்துவம் ஐந்தையும் தோற்றுவிப்பார்கள்.
Special Remark:
சிவன் முதலிய ஐவரே உண்மைக் கருத்தாக்களாக ஏனை, `அனந்த தேவர், சீகண்டர், மால், அயன்` முதலியோர் உபசார கருத்தாக்களேயாதலின், `அவரும், அவர்தம் செயல்களும் இவ் வுண்மைக் கருத்தாக்களாலே உள ஆவன` என்பது பெறப்படும். படவே, `அக்கருத்தாக்கள் ஐவரும் விந்து நாதங்களை முதலாகக் கொண்டவர் ஆதலின், அவ்விந்து நாதங்கள் இன்றி உலகம் இல்லை` என்றதனால், அவ்விந்து நாதங்களின் வடிவாகிய இலிங்கம் உலக முதலாகும்` என்றதாயிற்று `இவ்வாறு இலிங்க வடிவின் உண்மையை உணரும் உணர்வே ஆத்தும லிங்கம்` என்பது கூறப்பட்டது.
`விந்து; நாதம்` என்பன பரவிந்து பரநாதங்களையும் அபர விந்து அபர நாதங்களையும் ஏற்ற பெற்றியான் உணர்த்தி நிற்கும் ஆதலின், இங்கு அவை பரவிந்து பரநாதங்களை உணர்த்தின. அவை முடிநிலை முதலாய் நிற்றலின் அவற்றை ஒழித்து, அபர நாதம் முதலாகவே தத்துவங்கள் எண்ணப்படுகின்றன. அபர நாத மூர்த்தியே, `சிவன்` என்றும், அபர விந்து மூர்த்தியே `சத்தி` என்றும் சொல்லப் படுகின்றனர். அம்மூர்த்திகட்கு இடமாய் நிற்கும் தத்துவங்களே, `சிவதத்துவம், சத்தி தத்துவம்` - எனப்படுகின்றன. ``இலிங்கம்`` இரண்டினில் முன்னது பொதுவாக இலிங்க வடிவினையும், பின்னது சிறப்பாகப் பிழம்பினையும் குறித்தன.
முதல்வர் ஐவரையும் ``கரு ஐந்து`` என அஃறிணை வாய்பாட்டாற் கூறினார். கடவுளரை எத்திணை வாய்பாட்டிலும் கூறுதல் வழக்காதலின் ``தெய்வமாய்`` என்பதன்பின், `கொண்டு` என ஒருசொல் எஞ்சிநின்றது.
இதனால், `இலிங்க வடிவம் உலக முதலின் வடிவம் என உணரும் உணர்வே ஆத்தும லிங்கமாதல் கூறப்பட்டது.