ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம் 

பதிகங்கள்

Photo

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.

English Meaning:
Sunder Bonds of Birth at Feet of Guru

Having achieved divine Mudras three 1
Directed breath into the Centres three 2
And coursed its rhythm in finger-measure four,
—They who sat thus in yoga,
Joyous at lumniscent Guru`s Feet,
Have for ever sundered bonds all,
And never be born and dead again.
Tamil Meaning:
சிவ குருவின் திருவடிப் பேற்றால் எல்லாப் பொருள் களும் அற்றுச் `சிவஞாதா, சிவஞானம், சிவஞேயம்` என்னும் மூன்று பொருளிலே வந்து முடிந்த தன்மையை, `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` என்னும் மூன்று வகையில் இயங்கும் பிரணவாயுவை முறைப்படி அடக்குமாற்றால் ஞேயமாகிய ஒன்றில் அடங்கச் செய்தலால் விளைந்த ஆனந்தத்தால் திரிபுடியாகிய கட்டினை அறுத்தோர் அதன்பின் பிறந்தும், இறந்தும் வருதலைச் செய்யார் முத்தி பெறுவர் என்றதாம்.
Special Remark:
`ஒண்குரு பாதத்தால்` என உருபு விரித்து. அத் தொடரை முதலிற் கூட்டி, `முடிந்ததை உய்த்த வத்து ஆனந்தத்தால் பெத்தம் அறுத்தோர் பிறந்திறவார்`` என வினை முடிவு செய்க. முத்திரை - குறி பொருள். ``மூன்று`` இரண்டில் முன்னது ஞாதுரு முதலிய மூன்றையும், பின்னது இடைகலை முதலிய மூன்றையும் குறித்தன. நான்மடங்கா - ஒன்று நான்காக. அஃதாவது, பதினாறு மாத்திரையளவாகப் பூரித்ததை அறுபத்து நான்கு மாத்திரை யளவாகக் கும்பித்தல். இம்முறையில் ஞாதுரு முதலிய மூன்றையும் வத்துவின் கண் உய்த்தலாவது, இப்பிராணாயாமத்தால் ஞேயப் பொருளாகிய சிவத்தையே தியானித்து அதனில் ஒன்றி யிருத்தலாகிய சமாதி நிலையைப் பெறுதல். ``உய்த்த`` என்னும் பெயரெச்சம், ``வத்து`` என்னும் இடப்பெயர் கொண்டது. வத்து, பரவத்து பரம்பொருள். வத்துவினது ஆனந்தத்தால் பெத்தம் அறுத்தோர் - பரம்பொருளாகிய சிவனது ஆனந்த மேலீட்டார் திரிபுடி ஞானத்தை அறுத்தோர். திரிபுடி ஞானமும் ஆனந்தானுபவத்திற்குத் தடையாகலின், ``பெத்தம்`` எனப்பட்டது. ``பிறந்திறவார்`` என்றது, `ஏனையோர் போலப் பிறப்பில் மீளாது, எவ்வாற்றானும் முத்தியைப் பெறுவர்` என்றதாம்.
இதனால், ஞாதுரு ஞான ஞேய வேறுபாடு நீங்குதற்கு யோகமும் தக்கதொரு சாதனமாதல் கூறப்பட்டது. `இவ்யோகம் உபாய நிட்டை` என்க.