ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம் 

பதிகங்கள்

Photo

தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம்
தானென் றவனென் றிரண்டும் தனிற்கண்டு
தானென்ற பூவை அவனடிச் சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.

English Meaning:
You and he

The two categories — You and He
See them both in you and He;
Offer the flower ``you`` at the Feet of He;
Then no more be it proper to say: ``You and He``.
Tamil Meaning:
`ஆன்மாவும், சிவமும்` எனப்பொருள் இரண்டாம். அவ்விரண்டையும் ஆன்மாவாகிய ஞாதா தனது ஞானத்தின்கண் வைத்து நன்கு காணுதல் வேண்டும். பின் அங்ஙனம் கண்டதன் பயனாக ஞாதா தானாகிய மலரைச் சிவனுக்கு அவனது அருபளாகிய திருவடியிலே சாத்திவிடுவானாயின், முதலில், `ஆன்மா, சிவம் எனப் பொருள் இரண்டுள்ளன` என உணர்ந்த உணர்வு நல்லதோர் உணர்வாய்ப் பயன் தரும்.
Special Remark:
`பரமான்மாவை யன்றிச் சீவான்மா என்பதொன்று வேறில்லை` என்பாரை மறுத்தற்கும், `முத்தி நிலையில் பாசம் செயலற்று இருந்தும் இல்லாதனவாம்` என்பது உணர்த்தற்கும், ``தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம்`` என்றாராகலின், இது, மேல், (... ... ...)
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
என்றதனோடு மாறுகொள்ளாமை அறிக. ஞாதா தன்னையும், சிவத்தையும் தன் அறிவில் வைத்துக் காணுதலாவது, சிவம் தானே விளங்கும் அறிவினதாய் அறிந்தும், தனது அறிவினுள் நின்று அறி வித்தும் நிற்றலையும், தான் அச்சிவம் அறிவித்தாலன்றி அறிய மாட்டாமையையும் உணர்ந்து, அதனானே, தான் அடிமையும், சிவம் தன்னை உடைப்பொருளாதலையும் தெளிதல். அத் தெளிவு உள தாகவே, ஞாதா தனக்கெனச் செயல் இன்மையை உணர்ந்து, தான் சிவனது உடைமையாயே நிற்பனாகலின், அதனை உருவக வகையால், ``தானென்ற பூவை அவனடி சாத்துதல்`` என்றார். இதனை, ``கூட்டில் வாள் சாத்தி நிற்றல்``1 என வேறோர் உருவகத்தால் உணர்த்தினார் திருவுந்தியார் ஆசிரியர். ``என்று, என்கை`` என்பன எண்ணிச் சொல்லுதலைக் குறித்தன. ``அன்றே`` என்பது தேற்றத்தின் கண் வந்தது. இங்ஙனமன்றி, ஏகாரத்தை ஈற்றசை யாக்கி, `திரிபுடி ஞானம் நில்லாது போவதாம்` எனவும் உரைப்பர்.
இதனால், ஞாதாவும் ஞேயம்போல என்றும் உள்பொருளே யாயினும், அவன் ஞேயத்தில் அடங்கியவழியே இன்பம் பெறுதல் கூறப்பட்டது.