ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம் 

பதிகங்கள்

Photo

வைச்சன ஆறாறும் மாற்றி எனைவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவம் மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை ஆண்டனன் நந்தியே.

English Meaning:
Nandi Redeemed Me in Jneya

He rid me of Tattvas six and thirty,
He elevated me;
And enveloped me in the infinite
Expanse of the Spirit;
He imparted me the State of Permanence
He transformed me into Siva Divine;
And through the Subject-Object identity
Dispelled my ignorance
Thus He redeemed me
He, Nandi of blessed memory.
Tamil Meaning:
எம் குரவராகிய நந்திபெருமான் என் மேல் வைத்த தமது அருளினால், முன்னே என்னைக் கட்டுட் படுத்து வைத்த முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கி என்னை அவற்றினின்று வேறாக்கி வைத்து, என்னை யாவரும் `பெரியோன்` என்று புகழும் படிச் சிவ வியாபகத்தை என்பால் மேலிடுவித்துப் பின் உறுதியாக என்னைச் சிவமேயாகச் செய்து பிறவிக்கு அஞ்சும் எனது அச்சத்தை ஒழித்து என்னை ஆட்கொண்டருளினார்.
Special Remark:
`அதனால், யான் இதுபொழுது ஞேயமேயாய் நிற்கின்றேன்` என்பது குறிப்பெச்சம். ஞேயமேயானபின் சொல்நிகழ வழியில்லையாதலின், இங்ஙனம் சொல் நிகழ்ந்தவாறு என்னை யெனின், அதுவும் அந்த ஞேயத்தது இயல்பாகிய அருளால், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``1 என்று எழுந்த உணர்வினா லேயாம் என்க. `வியாபகத்துவம்` என்பது ``வியாத்துவம்`` என மருவிற்று. `மேலிடுவித்து` என்பது தொகுத்தல் பெற்றது.
இதனால், ஞாதா ஞானத்தைப் பெற்று ஞேயத்து அழுந்தும் முறைமை கூறப்பட்டது.