ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்

பதிகங்கள்

Photo

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணரவல் லார்கட்கு
நாவி அணைந்த நடுதறி ஆமே.

English Meaning:
Yogi Realizes God Within

As from within the flower,
The hidden fragrance wakes to life,
So, out of Jiva blossoms
Siva`s divine grace;
Sitting unmoved like painted picture
The yogi realizes Him within
Like the planted pole is He,
Which the musk-cat embraces, its fragrance to shed.
Tamil Meaning:
பூ மலர்தற்குமுன் அதன் மணம் அதனுள் அடங்கி யிருத்தல் போல, உயிர் பக்குவப்படுதற்கு முன் அதன் அறிவுக்கு அறிவாய் அதனுள்ளே தோன்றாதிருந்த சிவம், பக்குவத்தால் உள்ளமும், உடலும், எழுதப்பட்ட ஓவியம் போல அசைவற்று நிற்கப் பெற்ற யோக உணர்வினர்க்கு வெளிப்பட்டு விளங்கும். அப்பொழுது அவர்களது உள்ளமும், உடலும் புனுகு பூனையால் கூடப்பட்ட மூங்கில் தறி அதன் மதநீரால் மணம்பெற்றுத் திகழ்ந்தது போலச் சிவமணம்கமழப் பெற்றுச் சிவதனுவும், சிவகரணமுமாய் விளங்கும்.
Special Remark:
``பூத்தது`` என்பதனை மூன்றாம் அடியில் இறுதியிற் கூட்டி,அதன்பின், `அதனால்` என்னும் சொல்லெச்சமும், ``ஆம்`` என்பதற்கு வினைமுதலும் வருவித்து உரைக்க. புனுகு பூனையே, `கத்தூரி மான்` எனப்படுகின்றது. இதன் மதமே மிக்க நறுமணம் கமழ்வதாகிய கத்தூரி, கத்தூரியே `மான் மதம்` என்றும், ``மிருக மதம்`` என்றும் சொல்லப்படுவது. இவ்விலங்கினிடமிருந்து இதன் மதத்தைக் கொள்ள வேண்டுவோர் இதனைக் கூட்டில் அடைத்து நல்லுணவு கொடுத்து, இதற்கு இன்ப வேட்கை மிகும்படி செய்வர். அதுபொழுது இஃது அக்கூட்டினுள் முன்பே பொருத்தப்பட்டுள்ள மூங்கிற் குழாயை அணைந்து தனது மதத்தை வெளிப்படுத்த, அதனை அம்மக்கள் எடுத்துக்கொள்வர். அம்மதம் உள்ள பொழுதும், எடுக்கப்பட்ட பின்பும் அம் மூங்கிற் குழாய் தன்னுள்ளே அம்மணம் கமழப் பெறுவதாயே இருக்கும். அதனையே, ``நாவி அணைந்த நடு தறியாமே`` என உவமித்தார். ஆக்கம், உவமை குறித்து நின்றது.
``நாவியின்கண் - போதுறு மதம் விடுத்துப்
புன்மலங் கொள்ளு மாபோல்`` 1
என்ற சிவப்பிரகாசர் மொழியிலும் இம் மான்மதம் குறிப்பிடப்படுதல் காணலாம்.
இதனால், மேற்கூறிய சிவ விளக்கம் உவமையில் வைத்து இனிது விளக்கப்பட்டது.