ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 5. சரியை

பதிகங்கள்

Photo

கிரியையோ கங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே.

English Meaning:
Worship in the Four Paths

Kriya is worship of Siva in Form,
Yoga of the Formless One,
Jnana is the advanced path in ripeness of time,
The adoration of the loving heart is Chariya,
Exalted indeed it is.
Tamil Meaning:
கிரியை வழிபாட்டிலும், யோக வழி பாட்டிலும் சிவனது அருள் உருவம் நிற்கும். ஞானவழிபாட்டில் உருவம் அற்ற அருவ நிலை தோன்றும். இவ்வழிபாடுகள் சத்தி நிபாத நிலைக்கு ஏற்பக் குருவின் வழி நூல் நெறியாற் செய்யப்படுவன. இவ்வாறன்றி அன்பு காரணமாகத் தத்தமக்கு இயலும் வகையிற் செய்யப்படுவன இவற்றினும் உயர்ந்த வழிபாடாய் அமையும்.
Special Remark:
நிரல் நிறையில் கிரியை, யோகம் இரண்டும் `உரு` என வரும் ஒன்றனோடே இயைதற் பொருட்டு, ``கிரியை யோகங்கள்`` எனத் தொகைப்படுத்து ஓதினார். `உரு` என்பதன் ஈற்று முற்றியலுகரம் உயிர்வரச் சிறுபான்மை கெட்டது. இவை, பருவத்துத் தேர்ந்திடும் பூசை எனச் சுட்டுப் பெயர் வருவித்து முடிக்க. தேர்தல், கேட்டல் சிந்தித்தல்களால் மெல்ல உணர்தல். உரியன, இயலுந் திறம்பற்றிக் கொள்ளுதற்கு உரியன. இவை திருநீலகண்டத்துக் குயவனார். அதி பத்தர் முதலியோரால் கொள்ளப்பட்ட செயல்கள் போல்வன. இவை யெல்லாம் உலகத்தார்க்குச் சரியை போலவும், பொதுச் சிவபுண் ணியங்கள் போலவும் தோன்றுதலின், இவ்வதிகாரத்துட் கூறினார். `நேயத்து உரியன` என மாற்றிக்கொள்க. எடுத்த எடுப்பில் இதன்கண் நெறிகள் பலவும் தொகுத்துக் கூறப்படுதலும் நோக்கத்தக்கது.
இதனால், நூன்முறை வழிபாடு, அன்பு முறைவழிபாடு` என வழிபாடு இருவகைத்தாதல் உணர்த்தப்பட்டது. இவற்றை முறையே, `விதி மார்க்கம், பத்தி மார்க்கம்` என்பர்.