ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 5. சரியை

பதிகங்கள்

Photo

பத்தர் சரியை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த இயமாதி தூயோகர் சாதகர்
சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.

English Meaning:
Ways of Those Who Follow the Four Paths

They who follow path of Chariya are Bhaktas;
In Kriya the devoted souls wear holy emblems,
They who practise Yama and the rest are Yogis;
And they who reach Siva Jnana are Jnana Siddhas true.
Tamil Meaning:
சரியையில் நிற்போர் பத்தியையுடைய `பத்தர்` என்றும், கிரியையில் நிற்போர் அணுக்கத் தொண்டு செய்யும் அத்தகுதியை யுடைய `தொண்டர்` என்றும், இயமம் முதலிய யோக நிலைகளில் நிற்போர் `சாதகர்` என்றும் ஞானத்தில் நிற்போர் `சித்தர்` என்றும் பெயர் பெறுவர். இவருள் முதல் இருவரும் திருவேடத்தைத் தவிராது பூண்பர்.
Special Remark:
எனவே, பின்னை யிருவரும் பெரும்பான்மையும் புறக் காட்சி யிலராகலின், திருவேடம் இன்றியும் காணப்படுவர் என்பது போந்தது. பத்தர் - பத்தியுடையவர். அணுக்கத்தொண்டே `தொண்டு` எனப்படுமாதலின், இவர் `தொண்டர்` எனச்சிறப்பித்துக் கூறப் பட்டாராயினர். அணுக்கத்தொண்டினை `பணிவிடை` என்பர். சித்தர் - பேறு பெற்றவர். `சாதகர் தூயோகர்` என்பது பாடமாயினும் இதுவே பொருள் என்க.
இதனால், காரணப்பெயர் கூறும் முகத்தால், சரியை முதலிய நான்கிலும் நிற்போரது தராதரம் உணர்த்துப்பட்டது.