ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்

பதிகங்கள்

Photo

வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே
தஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்.
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே. 

English Meaning:
Vijnanakalas may by karma assume form corporeal;
But by performing holy deeds,
Acquire Celestial frame
And higher Jnana Form;
And Constant striving thus,
Gain wisdom perennial
And in the end Siva Himself become.
Tamil Meaning:
சகல வருக்கத்தினர் வெவ்விய ஞானமாகிய சீவ போதத்தால் செய்துகொண்ட வினைகளில் சில நல்வினை காரணமாக மக்களுடம்பைப் பெற்றுப் பூலோகத்தில் வாழ்ந்து, அங்கும் அந்தச் சீவபோதத்தால் செய்த கன்மங்களில் சில நல்வினை காரணமாகச் சுவர்க்கலோகத்தில் தேவராய் இன்பந்துய்த்துப் பின் எம் ஞானம் போல்வதாகிய மெய்ஞ்ஞானத்தைத் தலைப்பட்டு, அது முதி ராமையால் இடையீடுபட்டுப் பதமுத்தி அபரமுத்திகளில் நின்று, முடிவில் மெய்ஞ்ஞானம் முதிரப்பெற்றுச் சிவத்தோடு இரண்டறக் கலத்தல் உள்ளதே.
Special Remark:
`அதனால் அவர் பிரளயாகலர் விஞ்ஞானகலராதற்குத் தடையில்லை` என்பது குறிப்பெச்சம். இதனானே, சகல வருக்கத்தினர் மேல் நிலையை எய்துமாறு கூறப்பட்டவாறு அறிக. சகலர்க்குக் கூறிய இம்முறைபற்றி ஏனை இருவகையினர் மேல் நிலை எய்துமாறும் அறியப்படும்.
`கூடி, புக்கு, போய், மேவல்` என்பதற்கு, `சகலத்தார்` என்னும் எழுவாய், மேலைத் திருமந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. `விஞ்ஞான, அஞ்ஞான` என்பன பாடம் அல்ல.
இதனால், ஏதுக் கூறி மேலது வலியுறுத்தப்பட்டது.