ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்

பதிகங்கள்

Photo

விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே. 

English Meaning:
Vignanars true are of groups four
Pralayakalas are of three;
Sakalars below are another three
Thus are Jivas grouped, ten in all.
Tamil Meaning:
எல்லா உயிர்களும் `விஞ்ஞானகலர், பிரளயா கலர், சகலர் என்னும் மூவகையுள் அடங்கி நிற்கும். அம்மூவகையினருள் விஞ்ஞானகலர் நான்கு வகையினர்; பிரளயாகலரும், சகலரும் தனித்தனி மும்மூன்று வகையினர்; ஆக அனைவரும் பத்து வகையினராவர்.
Special Remark:
விஞ்ஞானம் - விசேட ஞானம்; மெய்யுணர்வு. `விஞ்ஞானாகலர்` என்பது `விஞ்ஞானகலர்` என மருவி வழங்கும். அகலர் - கலை நீங்கினவர் கலை - மாயாகாரியம் என்றல் முக்குண வடிவாகிய பிரகிருதியை. விஞ்ஞானத்தால் கலை நீங்கியவர் விஞ்ஞானாகலர். விஞ்ஞானமாவது, சிவனால் உணர்த்தப்படும் விசேட ஞானம். இது வருதற்கு ஆணவமலத்தின் சத்தி மெலிதாதல் வேண்டும். அஃது இயல்பாகவே அமையப் பெற்றோர், இயற்கை விஞ்ஞானகலர்; இயற்கையாகவன்றித் தவத்தால் இந்நிலை வாய்க்கப்பெற்றுச் சிவனால் உணர்த்தப்படும் ஞானத்தைப்பெற்றுக் கலை நீங்கினோரும் மேற்கூறியவரோடு ஒப்பர் ஆதலின், அவர் செயற்கை விஞ்ஞானகலராவர்.
பிரளயாகலர் - பிரளயத்தில் (உலகம், யாவும் ஒடுங்கிய காலத்தில்) கலை நீங்கப் பெற்றவர். எனவே, `இவர் உலகம் ஒடுங்கிய காலத்தில் ஆணவ மலத்தின் சத்தி மெலிவடையப் பெற்றவர்` என்பது விளங்கும். இவர் இயற்கைப் பிரளயாகலர்; உலக ஒடுக்கத்திற்கு முன் இந்நிலையைப் பெற்றோர் செயற்கைப் பிரளயாகலர்.
சகலர் - பாசப்பற்று நீங்காதவர்; அஃதாவது ஆணவமல சத்தி வலிதாகப் பற்றப்பட்டவர். இவ்வன்மை மென்மைகளை, `தூலதரம், தூலம், சூக்குமம்` எனப் பகுப்பர். ஆணவமலப் பிணிப்புத் தூல தரமாக (மிகவன்மையாக) உடையவர் சகலர்; தூலமாக (சிறிது வன்மையாக) உடையவர் பிரளயாகலர். சூக்குமமாக (மென்மையாக) உடையவர் விஞ்ஞானகலர். இவருள், `நால்வர்` மூவர், மூவர்` எனப்பட்டோர் இவர் என்பது வருகின்ற திருமந்திரத்தால் விளங்கும்.
தம் ஞானம் - பசுஞானம். அஞ்ஞானம் - பாசஞானம் ஒரு புடை ஒற்றுமைகொண்டு சகலர் பிரளயாகலர் விஞ்ஞானகலரது ஞானத்தைப் பாசஞான பசுஞான பதிஞானங்களாக ஒதினார் என்க. ``விஞ்ஞானராதியர் வேற்றுமை`` என்றது `அனைவரது வகையும்` என்றவாறு.
இதனால், `உயிர்கள் மூவகைப்படும்` என்பதும், `அவற்றின் உள்திறங்கள் பத்தாம்` என்பதும் கூறப்பட்டன.