ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்

பதிகங்கள்

Photo

விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசுரம் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே. 

English Meaning:
Vijnanakalas are of classes four;
Those who are in Kevala (Anava) state,
Next are those who are Self-realised;
Those who reached the state of Eight Vidyeswaras,
And finally are those who rank as the Seven Crores of Manthra Nayakas;
Those who are of Egoity Impure rid
Are the truly realised beings (no more are they Jivas).
Tamil Meaning:
மேற்கூறியோருள் விஞ்ஞானகலர் நால்வராவார், `ஆணவமலத்தில் அழுந்தாத அவ்வளவில் நிற்போரும், அட்ட வித்தியேசுரபதவி, சத்தகோடி மகாமந்திரங் கட்குத் தலைவராம் பதவி இவற்றைப் பெற்றோரும், ஞானம் முதிரப் பெற்றோரும், அம்முதிர்ச்சியால் ஆணவமலம் பெரிதும் நீங்கப்பெற்ற முத்தரும்` என இவராவர்.
Special Remark:
மூவகை உயிர் வருக்கத்திலுள்ளாரும் `அபக்குவர், பக்குவர்` என இருதிறத்தினராய் இருப்பர். அபக்குவர், `சிவனைப் பெறவேண்டும் என்னும் ஆர்வம் இன்றித் தாம் உள்ள உலகத்துப்` போகங்களை நுகர்ந்திருப்போர். பக்குவர், சிவனைப்பெறவேண்டும் என்னும் ஆர்வத்தால் அவனை அடைந்திருப்பவர். ஆர்வம் உளதாய வழி அடைதற்கு இடையீடில்லை. இந்த ஆர்வம் சத்திநிபாதத்தால் உண்டாவதாகும். இவருள், ``கேவலத்து ஆராது விட்டவர்`` என்றது அபக்குவரை. கேவலமாவது ஆணவ மலத்தில் மூழ்கி அதுவேயாய்க் கிடத்தல், எனவே, இதுவே, `விஞ்ஞானகலர்` என்பவரது இயல்பாதல் பெறப்பட்டது. அவர் பக்குவம் எய்தியவழி ஞானத்தைப் பெற்று மூவகை நிலையில் நிற்பர். அஃதாவது, ஆணவ மலம் நீங்கிய தாயினும் அதன் வாசனை, `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலையினதாய் நீங்காது நிற்கும். இவை ஓன்றின் ஒன்றுமிக்க வன்மையுடையன; அவற்றுள் இலயமல வாசனை உடையவரையே, ``ஆணவம் விட்டு நின்றார்`` என்றார். ``விட்டு`` என்றதனால் மலம் நீங்கப் பெற்றமையும், ``நின்றார்`` என்றதனால், இலய வாசனை யளவாய் நிற்கப்பெற்றமையும் பெறப்பட்டன. இவர் சாந்திய தீத கலையில் சத்தி சிவ தத்துவ புவனங்களில் உள்ள போகங்களை நுகர்ந்திருப்பர். `அபரமுத்தர்` எனப்படுவார் இவரே என்க. ஆணவம் விட்டபின் இவர்போல நில்லாது, சிவனோடு இரண்டறக் கலந்து சிவனது பேரின்பத்தையே நுகர்ந்திருப்பவர் பரமுத்தராவர். அவரை உயிர் வருக்கத்தினருள் வைத்து எண்ணுதல் கூடாமையின், அவரைக் குறித்திலர்.
இனிப் போகமல வாசனை உடையவரையே `ஆணவம் விட்டார்` என்னாது ``மெய்ஞ்ஞானர்`` என்று மட்டும் குறித்தார். இவர் சாந்தி கலையில் சதாசிவ தத்துவத்தில் உள்ள புவனங்களில் அமைந்த போகங்களை நுகர்ந்திருப்பர். ஆகமங்களைக் கேட்டவராகச் சொல்லப்படும் `பிரணவர்` முதலிய பதின்மரும் இந் நிலையினராகவே சொல்லப்படுகின்றனர். உயிர் வருக்கத்தினராய்ச் சதாசிவ புவனத்துள் சாலோகம் முதலிய நிலைகளைப் பெற்று நிற்றலின் இவர்கள், `அணு சதாசிவர்` எனப்படுகின்றனர்.
அட்ட வித்தியேசுரராவார், அனந்தர், `சூட்சுமர், சிவோத்தமர் ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர்` சிகண்டி என்போர். இவர்கள் சிவாகமங்களைப் பலர்க்கும் உணர்த்துபவராதலின் `வித்தியேசுரர்` எனப் பெயர் பெற்றனர்.
சத்த கோடி மகா மந்திரங்கள், `நம:, ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வௌஷட், பட், ஹும் பட்` என்னும் ஏழுமுடிபுகளை உடையன. கோடி - முடிபு. இம் மந்திரங்களைக் கணிப்போருக்கு அவற்றின் பயனைத் தரும் தலைவராய் உள்ளோரே `மந்திர மகேசுரர்` எனப்படுவர். இவ்விருதிறத்தாரும் இப்பதவிகளைப் பெற்றுச் சாந்தி கலையில் ஈசுர தத்துவ புவனங்களில் வாழ்பவராவர். அதனால், இவ்விருவரும் ஒருவகையினரே என்க.
இவருள், அனந்த தேவர் சுத்த வித்தியா தத்துவத்திலும் சென்று அங்குள்ள பிரமனுக்கு வேதத்தையும், சீகண்டவுருத்திரருக்குச் சிவாகமத்தையும் அறிவுறுத்தி அங்குள்ள உருத்திரன், மால், அயன், இந்திரன் முதலியோர் வழியாக வித்தியா கலையுட்பட்ட புவனங் களையும், சீகண்ட உருத்திரர் வாயிலாகப் பிரதிட்டை நிவிர்த்தி கலைகளுட்பட்ட புவனங்களையும் நடத்துவர். இங்ஙனம், விஞ்ஞான கலர் நால்வரது இயல்பு ஒருவாறு கண்டுகொள்க.
எஞ்ஞானர் - எல்லா ஞானமும் உடையோர்; என்றது, `மந்திரம் கணிப்போர் அனைவரது செயலையும் உணர்வர்` என்றபடி. ``விஞ்ஞானர்`` என்றது, `விஞ்ஞான வகையினராவர்` என்றவாறு. இறுதியில் `இந்நால்வருமே` என்னும் தொகை எஞ்சி நின்றது. வித்தியேசுரர்களும் மந்திர மகேசுரர்களும் ஒருவகையினரேயாதல் வெளிப்படை.
இதனால், மேல், ``விஞ்ஞானர் நால்வர்`` எனப்பட்டார் இவர் என்பது கூறப்பட்டது.