ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 10. திதி

பதிகங்கள்

Photo

தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மாற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே. 

English Meaning:
He is Life within; He is the body corporeal;
He is Spirit Pure; He is space Infinite;
He is Light Radiant; He is Consciousness inside;
Animating life in the body
He supports me;
—He is Nandi.
Tamil Meaning:
சிவபெருமான் பல உயிர்களையும் அவற்றது உடலில் நிறுத்திக் காக்கின்ற காலத்தில் அக் காத்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவரும், அவைகளை அவற்றது உடம்பினின்றும் பிரிக்கின்ற காலத்தில் அப்பிரித்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவருமாக அவனுக்கு எதிராவார் பிறர் இல்லை. இனி விடாது வந்த எழுவகைப் பிறப்பிற்கும் முடிவாவது ஞானமே. அந்நெறியில் அவ்வுயிர்களைப் பிறழாது நிற்பிப்பவனும் அச் சிவபெருமானே.
Special Remark:
தன்மையைச் செய்வாரை, ``தன்மை`` என்றது ஒற்றுமை வழக்கு. பின் முன் உள்ள சொற்குறிப்புக்களால், `தாங்கிய காலத்து` என்பது முன்னரும், `வாங்கருந் தன்மையும்` என்பது பின்னரும் வருவித்துக் கொள்ளக் கிடந்தன. அதனால், `தாங்கிய காலத்துத் தாங்கருந் தன்மை செய்வாரும், வாங்கிய காலத்து வாங் கருந்தன்மை செய்வாருமாக மாற்றோர் பிறரில்லை` என்பது முன் னிரண்டடிகளின் பொருளாயிற்று. மாற்றோர் - எதிராவார். ``அந்தம்`` என்றது, `எழுமைக்கும்` என்றதனோடும் இயையும். `ஓங்கிய` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று. யோகத்தின் அந்தத்தில் தோன்று வதனை ``யோகாந்தம்`` என்றார். `ஞானம்` என்னாது ``யோகாந்தம்`` என்றதனானே, `சரியை முதலிய தவங்களில் நிறுத்திக் காப்பவனும் அவனே` என்பது போந்தது. தார் - (கொன்றை) மாலையை. அணி - அணிந்தவன். `மற்றோர் பிறிதில்லை` என்பது பாடம் அன்று.
இதனால், வருகின்ற அதிகாரங்கட்குத் தோற்றுவாய் செய்யப் பட்டது.