ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 10. திதி

பதிகங்கள்

Photo

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே. 

English Meaning:
At the end of aeons,
Once He stands as Pure Light,
Once as the tempestuous typhoon,
Once as incessant rain,
Once as Vishnu, floating on the deluge.
Tamil Meaning:
திருவருளால் ஐம்பூதங்களிலும் நிற்கும் சிவ பெருமானே, குணங்கள் மூன்றாயும், காலங்கள் மூன்றாயும் நிற்பான்.
Special Remark:
`அதனால் சத்துவ குணத் தொழிலாகிய காத்தலைச் செய்பவனும் அவனே` என்பதாம். அன்பு முதலாக இன்பம் ஈறாகக் கூறியவை சத்துவ குணத்தை விரித்தவாறும், இன்பக் கலவி தாமத குணத்தைக் குறித்தவாறுமாம். முன்புறு காலம் - உலகத்தது தோற்றக் காலம். ஊழி அதன் இறுதிக் காலம். இவை முறையே இறப்பும், எதிர்வும் குறித்தன. இராசத குணமும், நிகழ்காலமும் உபலக்கணத்தாற் கொள்ளநின்றன.
சிவபெருமான் எட்டுருவினன் (அட்ட மூர்த்தி) ஆதலும், அவற்றுள் ஐம்பூதங்கள் முக்குண வடிவினவாதலும் பலரும் அறிந்தன வாதலின், அவனை, `தாமத குணம் ஒன்றே உடையன்` எனவும், `அதனால், அழித்தலையே செய்வன்` எனவும் கூறுதல் அறியாதார் கூற்றேயாம் என்றபடி. இனி அவன் குணாதீதன் ஆதலும் நூல்களால் நன்குணர்த்தப்படுவது என்றற்குக் காலங்கள் மூன்றாதலையும் உடன் கூறினார்.
இதனால், `சிவபெருமான் காத்தற்கு உரியனல்லன்` எனப் பிணங்கிக் கூறும் பாஞ்சராத்திர மதத்தை மறுத்து, மேலது வலியுறுத்தப் பட்டது.