ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 10. திதி

பதிகங்கள்

Photo

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்
தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்
தானொரு காலந்தண் மாயனு மாமே.

English Meaning:
He is Nandi the Great;
In directions eight,
He is life pervasive;
He brings body and soul together in birth;
Even in the heart of those who doubt Him, He is;
And from there He seeks them;
This I have known Him oft perform.
Tamil Meaning:
சிவபெருமான் உயிர்களது அறிவு நிலைக்கு ஏற்பக் கதிர்க்கடவுள், வளிக்கடவுள், மழைக்கடவுள், (இந்திரன்) முதலிய பல்வேறு கடவுளராய்த் தோன்றுவான். ஆதலின், அவன் திருமாலாய்த் தோன்றுதலில் வியப்பில்லை.
Special Remark:
ஒருகால் - ஒருகாலத்தில்; என்றது, `உயிர்களின் பக்குவ நிலையில்` என்றவாறு. சுடர் முதலியன அவற்றை இயக்கும் கடவு ளரைக் குறித்தன. தண்மை, சத்துவகுணத்தைச் சுட்டியது. `பிறர் சத்துவ குணத்தை யுடையவனாகக் கூறும் மாயோன்` என்றவாறு. மாயோன் தொழிலால் மட்டுமே சத்துவன்; குணத்தால் தாமதனே. சிவபெருமான் பல்வேறு கடவுளராய்த் தோன்றலாவது, அவர் அவர் அறிவிற்கு ஏற்ப அவரையே முதற்கடவுளாக மயங்குமாறு அவர்பால் தனது ஆணையை வைத்துத் தத்தமக்கு இயலும் அளவு உலகத்தை நடத்தச் செய்தல். `அவ்வாற்றால் காக்கும் ஆணையைத் திருமாலிடத்து வைத்து நடத்துகின்றானாதலின், அத்திருமாலையே காத்தற் கடவுளாக உண்மை நூல்கள் ஓரோர் இடங்களிற் கூறுதலும், அங்ஙனம் கூறுதலின் உண்மையை உணரமாட்டாதார் அவனையே காத்தற் கடவுளாகவும், முதற்கடவுளாகவும் மயங்குதலும் இயல்பாகலின், அதுபற்றி ஐய மில்லை` என்பதாம். சண்டம் - வேகம். மாருதம் - காற்று. தளி - துளி.
இதனால், `காப்பவன் மாயனன்றோ` எனப் பௌராணிக மதம் பற்றி எழும் ஐயத்தினை நீக்கி, `காப்பவனும் சிவனே` என்பது இங்கும் வலியுறுத்தப்பட்டது.