ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 10. திதி

பதிகங்கள்

Photo

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. 

English Meaning:
As Light and Darkness He pervaded,
As Fame and Blemish He pervaded,
As Body and Life He pervaded,
As my constant thought He pervaded.
Tamil Meaning:
என்றும் உள்ளவனாய், எனது உள்ளத்தில் புகுந்து நீங்காது நிற்கின்ற சிவபெருமான், `ஒளி, இருள் - புகழ், இகழ் - உடல், உயிர்` முதலிய மறுதலைப் பொருள்களிலும் அவை அவையாய்த் தொடர்ந்து நீங்காது நிற்கின்றான்.
Special Remark:
`அதனாலே அவை நிலைத்து நிற்கின்றன` என்பது குறிப்பெச்சம். ஈற்றடியை முதலிற்கொண்டு உரைக்க. இதில் `நின்றான்` இரண்டில் முன்னது வினைப்பெயர்; பின்னது முற்றெச்சம். ஒவ்வோர் அடியிலும் எச்சங்களை முதலிலே கூட்டி முடிக்க. `வெளி` எனினும் `ஒளி` எனினும் ஒக்கும். இங்கு, ``ஒளி`` என்றது, ஆன்ம அறிவை விளக்கும் மாயா காரியங்களை. ``இருள்`` ஆணவமாதல் வெளிப் படை. அதனுள்ளும் இறைவன் நிற்றல், அதன் சத்தியை இடையறாது தொழிற்படச் செய்து மெலிவித்தற்காம். புகழ்வு - புகழ்தல். இகழ்வு - இகழ்தல். இத்தொழிற் பெயர்கள் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளாய அவ்வச்சொன்மேல் நின்றன. இவற்றால் அவன் அச்சொற் கட்குப் பொருளாம் உயர்பொருள் இழிபொருள்களின் நிற்றல் குறிக்கப்பட்டது. ``உடல்`` என்றது சடப்பொருள்கட்கு உபலக்கணம்.