ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 10. திதி

பதிகங்கள்

Photo

உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியாய் விளங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரம்
தள்ளுயி ராம்வண்ணந் தாங்கிநின் றானே.

English Meaning:
Himself fashions worlds all in detail minute
Himself fashions life, conferring birth
Himself fashions things big and small
—The cauldron, the pitcher and the pot
Himself He fashions these and more
—He the Architect Almighty.
Tamil Meaning:
`தூய உயிர்` எனப்படும் பரமான்மாவாகிய பெருவெளியாய், தூய்மையின்றி மாசுண்டு கிடக்கும் சீவான்மாவாகிய உயிரினுள் அறிவு தோன்றுதற்கு ஏதுவாய் நிற்பதாய இயற்கை அறிவே உயிரின் உடலையும் இடமாகக்கொண்டு நிற்கும் `பரம்பொருள்` எனப்படுவது. அதனை இழந்துநிற்கும் உயிர் அதுவாம் வண்ணம், அதன் உடலாயும், அவ்வுடல் வாழ்வுறுதற்கு அதனுள் நிற்கும் உயிர்ப் பாயும் உள்ள சிவபெருமானே அதனைக் காத்து நிற்கின்றான்.
Special Remark:
இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, ``தாங்கி நின்றான்`` என்பதை உள்ளவாறே நிறுத்தி முடிக்க. ``விளங்கொளி`` என்பதன்பின் `ஆய்` என்பது விரிக்க. `நிலங்கொளி` என்பது பாட மன்று. ``தள் உயிர்`` என்பதில் ``தள்ளுதல்``, தவறவிடுதல். இதன்பின் `அது` எனப் பரம்பொருளைச் சுட்டும் சுட்டுப்பெயர் எஞ்சி நின்றது. `பரம்பொருளை அறியாது நிற்கும் உயிர் அதனை அறியும் வண்ணம் பக்குவம் முதிர்தற் பொருட்டே அதனை உடலில் நிறுத்திப் புரக்கின்றான்` என்றவாறு. ``உயிர்ப்பாய்`` என்றதனால் உடலை நிற்பித்தலையும், ``உடலாய்`` என்றதனால் உயிரை அஃது எடுத்த பிறப்பில் நிறுத்துதலையும் குறித்தவாறு. இறைவன் உடலினுள் உயிர்ப்பாதலை,
``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` -தி.5 ப.21 பா.1
என்பதனான் அறிக.
இதனால், காத்தல் தொழிலின் பயன் கூறப்பட்டது.