ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி

பதிகங்கள்

Photo

அரிபிர மன்தக்கன் அற்க னுடனே
வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன்
சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

English Meaning:
Lacking Lord`s Grace
Many the high and handsome
That destruction and disfigurement met;
Thus Hari, Brahma, and Daksha
The Sun, Moon and Fire and Indra as well
All these Gods lost
Head, face, nose hand and shoulder; some limb or other.
Tamil Meaning:
சிவபெருமானது கருணையைப் பெறாமையால், தலை, முகம், கை, தோள் என்பவற்றை இழந்த குற்றவாளிகள் முறையே, `மால், அயன், தக்கன்` என்பவரும், சூரிய சந்திரர் கலை மகளும், அக்கினிதேவனும், அழகிய இந்திரனும் ஆவர்.
Special Remark:
``தலை`` என்றதைத் திருமாலுக்கு `தலைமை` என்ற வாறாகக் கொள்க. எண்ணொடுவின் பொருட்டாகிய ``உடனே`` என்ற தனால், `சூரிய சந்திரர்` என ஒரு தொகையாக்குக. வாலை - வெண் ணிறம் உடையவள். இதனைத் தக்கன் மனைவிதன் பெயர் என்பாரது உரைக்குச் சான்றில்லை. தக்கன் மனைவி பெயர், `வேதவல்லி` என்றே கந்தபுராணத்துட் கூறப்பட்டது. இதனுள்ளன்றித் திருவாசகத்தும்,
``நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகனெரித் துந்தீபற;
தொல்லை வினைகெட உந்தீபற``
-தி.8 திருவுந்தியார், 13.
என நாமகள் நாசி அறுபட்டமை கூறப்பட்டது. `முகம்` என்பது `வாய்` எனவும் பொருள்தருமாகலின், அதனை இரட்டுற மொழிந்து, `அருக்கன் (சூரியன்) பல்லிழந்தான்` என்க.
``சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற;
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற``
-தி.8 திருவுந்தியார், 15
என்றருளினமை காண்க.
இந்திரன் போகியாதலைக் குறிக்க, `நல் இந்திரன்` என்றார். ``நல்லோர்`` என்றது இகழ்ச்சி பற்றி.
இதனால், தக்கன் வேள்வியில் தேவர் பலரும் பலவாற்றால் ஒறுக்கப்பட்டமை கூறப்பட்டது.