ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி

பதிகங்கள்

Photo

அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.

English Meaning:
And so it befell at Daksha`s sacrifice,
And so indeed it befell;
A wonder though it be,
Verily that is what there befell;
Thus does the Lord lend His Grace
In the knowledge of each according to his desert.
Tamil Meaning:
மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே சிவ நிந்தை செய்பவனாகிய தக்கனது தலைமையான வேள்வியில் அக்கினி தேவன் ஏனையோர் வேள்வியிற் போலவே கிளர்ந்தெழுந்து தன் கடமையைச் செய்யமுற்பட்டது வியப்பு என்றாலும், தக்கனோ டேயன்றி ஏனைத் தேவரோடும் மாறுபடுதற்கு அஞ்சிய அவனது நிலைமையைத் திருவுளத்தடைத்து அவனுக்கு அளித்திருந்த ஆற்றலை மாற்றாது சிவபெருமான் வாளா இருந்தான்.
Special Remark:
`அயன்` என்பது தக்கனுக்கும் பெயராய் வழங்கும். பதி - தலைமை. `அந்நீர்மை` எனற்பாலதனை, ``அது நீர்மை`` என்றார். `அப்பரிசாய அந்நீர்மை` என்க; ஆலித்தல் - மகிழ்தல்; இசைந்திருந்தல். இதனால், சிவபெருமான் அக்கினிதேவனை மன்னித் தருளினமை கூறப்பட்டது. அக்கினி தேவன் கையை வெட்டினமை திருவாசகத்துத் திருவுந்தியாரில் கூறப்பட்டது. `அது பெருந் தண்டம்` அன்று என்னும் கருத்தால் அவனது சுடும் சத்தியை மாற்றாதிருந்தமை கூறினார் என்க.