ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்

பதிகங்கள்

Photo

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. 

English Meaning:
To them that exalt His name, the first to Beings He;
To them that scorn His Grace, persist sufferings
In rapture lost, if you chant not His Glory great,
He stands, a veritable stone-cow, in silence complete.
Tamil Meaning:
எங்கள் சிவபெருமான், ஒருப்பட்டு நிற்கும் அன்பர்க்கும், ஒருப்படாது முரணி, இகழ முற்பட்டு நிற்கும் வன்பர்க்கும் மூதாதையே. எனினும், தம்மொடு மேவாத மைந்த ரிடத்து அன்பு செய்யாத தந்தையர்போல, தன்னை இகழ்ந்து, தனது பெருமையை மகிழ்ச்சியுண்டாகக் கற்றும் கேட்டும் உணராது நீங்கி நிற்பார்க்குத் துன்பத்திற்கு ஏதுவாக, பால் கறவாத கற்பசுப்போல அருள்செய்யாது நிற்பன்.
Special Remark:
`புகழ நின்றார்க்கும், இகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன்` எனவும், `கழிய நின்றார்க்கு இடும்பைக் கிடமாக் கற்பசுவாம்` எனவும் கூட்டுக. இனி, `இடும்பைக் கிடமாக் கழிய நின்றார்க்கு` என இயைத்தலுமாம். ``கற்பசுவாம்`` என்றதில் ஆக்கம், உவமை குறித்து நின்றது. `கேட்டு` என்பது அதிகாரத்தால் வந்தது. `உணராது` என்பது ஈறு குறைந்து நின்றது. ஒன்று - சிறுமை; பயன்படாமை. ``கழிய நின்றார்க்குக் கற்பசுவாம்`` எனவே, கழியாது பற்றிநின்றார்க்குப் பாற்பசுவாதல் பெறப்பட்டது. இதன்கண் மூன்றாம் எழுத்து எதுகை வந்தது.
இதனால், சிவநெறிக் கேள்வியுடையோர் பேரின்பம் எய்த லும், அஃது இல்லாதார் அதனை எய்தாமையும் கூறப்பட்டன.