ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்

பதிகங்கள்

Photo

பெருமான் இவனென்று பேசி யிருக்குந்
திருமா னுடர்பின்னைத் தேவரு மாவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே. 

English Meaning:
The pious mortals who praise the Supreme Lord,
In time to come, to the Immortals` status rise;
Who fail not in penance, His joyous Grace receive;
Thus the Lord of rare penances rare awards the Supreme prize.
Tamil Meaning:
உலகியலை விட்டு மெய்ந்நெறி நோக்கி வருகின்ற தவத்தோர்க்கு அதனை அருளுபவன் அரிய தவக் கோலத்தையே தனது கோலமாக உடைய எங்கள் சிவபெருமானே. அதனால், `இவனே யாவர்க்கும் தலைவன்` என்று உணர்ந்து அவனது புகழைத் தம்மிடையே பேசிக் களிக்கும் திருவுடை மக்களே பின்னர் எப் பயனையும் எளிதிற் பெறுவர்.
Special Remark:
`அதனால் அவன் புகழையே கேட்க` என்பது குறிப் பெச்சம்.
``செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ`` -தி.4 ப.9 பா.3
என்று அருளிச் செய்தார் திருநாவுக்கரசரும். பேசுதல், கருத்துக்களைக் கொண்டும், கொடுத்தும் அளவளாவுதல். ``உன் திருவார்த்தை - விரிப்பார் கேட்பார் மெச்சுவார்`` (தி.8 கோயில் மூத்த திருப்பதிகம் - 9) என்ற திருவாசகத்தைக் காண்க. திரு - நற்பேறு. ``பேசி இருக்கும் திருமானுடர்`` என உடம்பொடு புணர்த்து ஓதியதனால், `அவ்வாறு பேசி இருத்தலே திருவாம்` என்பது பெறப்பட்டது. ``மாதவர்`` என்றதனால், `அவர் மெய்ந்நெறி விருப் பினர்` என்பதும், ``அருமாதவன்`` என்றதனால், `அவர்க்கு அருள் புரிய வல்லான் அவனே` என்பதும் பெறப்பட்டன.
இதனால், மெய்ந்நெறியுள் சிவநெறிக் கேள்வியது சிறப்புத் தனித்தெடுத்துக் கூறப்பட்டது.