ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 21. அன்புடைமை

பதிகங்கள்

Photo

நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன்
வைத்த பரிசறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடகி லாரே. 

English Meaning:
Birth He caused, and Death, too, in its wake;
This mystery we daily see; and yet mankind
Cling in deep desire to life, but call not on Him,
Nor seek Him, saying, ``Our Father, great and kind.
Tamil Meaning:
எவ்வுயிர்க்கும் உறக்கமும், விழிப்பும் நாள் தோறும் நிகழுமாறு செய்தவன் அங்ஙனம் செய்த குறிப்பை அறியாதார் நிற்க, அறிந்தவர்தாமும் உலக ஆசையையே உள்ளத்தில் கொள்கின்றனர். அத்தலைவனை விரும்பி, அவனையே தமக்குப் பெருமானாக நினைக்கின்றிலர்.
Special Remark:
`அவர்தம் அறிவு என்னோ` என்பது குறிப்பெச்சம். துஞ்சு, முதனிலைத் தொழிற்பெயர். `உறக்கமும் விழிப்பும் நாள் தோறும் நிகழ வைத்தது, இறப்பும், பிறப்பும் மாறி மாறி விரையவரும் என்பதனை உணர்தற்பொருட்டு` என்பது கருத்து. அதுபற்றியே `உறக்கம், விழிப்பு` என்பவற்றை அவையேயாகக் கூறினார். திருவள்ளுவரும்,
உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. -குறள், 339
என அறிவுறுத்தல் காண்க. இங்ஙனம் கூறியவாற்றால், `சிவபெரு மானிடத்து அன்பு செய்யாதார் அடைவது பிறப்பும், இறப்புமாகிய துன்பமே` என்பது கருத்தாதல் அறிக.
இதனால், சிவபெருமானிடத்து அன்பு செய்யாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.