ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 21. அன்புடைமை

பதிகங்கள்

Photo

முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்தன் அகலிடத் தானே.

English Meaning:
Many know not Him who first wrought this world,
And wrapt in infinite Love, born of His lordly Grace;
In this world, evil-ridden, He filled our life
With His love unending, He, the Lord of limitless space.
Tamil Meaning:
தனது உலகத்திலேயே விளங்கி நிற்பவனாகிய சிவபெருமான், துன்பத்தையே மிக உடையதாகிய இவ்வுலக வாழ்க்கையில், அத்துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் அடைதற் பொருட்டு `அன்பு` என்னும் பண்பினையும் படைத்து வைத்துள்ளான். அவ்வாறு அன்பை முன்னதாகவும், இன்பத்தை அதன் பின்னதாகவும் வைத்துள்ள அம்முதல்வனது அருளை அறிந்து, அவனிடத்தில் உலகர் அன்புசெய்கின்றாரில்லை.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `அம்முதலிடை` எனச் சுட்டு வருவிக்க. ``எம்பெருமானை`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. வன்பு - துன்பம், `வன்பு அடைத்த` (தி.7 ப.92 பா. 3) என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அடைத்தல் - நிறைதல்; நிறைத்தல் உலகத்தைத் திருஞானசம்பந்தரும், ``துயரிலங்கும் உலகம்`` என்றார். (தி.1 ப.1 பா.8)