ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 21. அன்புடைமை

பதிகங்கள்

Photo

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 

English Meaning:
The ignorant prate that Love and Siva are two,
But none do know that Love alone is Siva
When men but know that Love and Siva are the same,
Love as Siva, they e`er remain.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.
Special Remark:
``இரண்டு`` என்றதற்கு முன், `இரண்டும்` என்னும், செவ்வெண் தொகை தொகுத்தலாயிற்று. `அன்பும் சிவமும்` என்பதும் பாடம். இரண்டு - இருவேறு பொருள்கள். ``சிவம்`` என்றது இங்கு, விடாத ஆகுபெயராய் அவனது பேரின்பத்தின்மேல் நின்றது. அறிவு - பொருட்பெற்றியை ஓர்ந்துணரும் அறிவு. ``ஆரும்`` இரண்டனுள் முன்னது உயர்ந்தோரையும், பின்னது தாழ்ந்தோரையும் குறித்துநின்ற அறிதலின் அருமையையும், அமர்தலின் எளிமை யையும் குறித்து நின்றன. `அறிந்தபின் ஆரும் அமர்ந்திருந்தார்` என மாற்றுக. ``அறிந்தபின்`` என்றது, `அறியின்` என்றவாறு. அமர்ந் திருத்தல் - அலமரல் இன்றி நிலைபெற்றிருத்தல். துணிவினால் எதிர் காலம் இறந்தகாலம் ஆயிற்று. உயிர்களிடத்துக் கொள்ளும் அன்பு பின் இறைவனிடத்து அன்பு செய்யும் தன்மையையும், இறைவனிடத்துச் செய்யும் அன்பு அவனிடத்தே அழுந்தி இன்புற்றிருக்கும் நிலையை யும் தரும் என்றற்கு, பொதுப்பட, ``அன்பு`` என்று அருளிச் செய்தார். இவ்விருவகை அன்பும் நிரம்பிய காலத்து அவை தம் பயனை இடை யீடின்றி விரையத்தருதலால், அவற்றையே இறைவனாக வலியுறுத்து ஓதினார். மாணிக்கவாசகரும் ``அன்பினில் விளைந்த ஆரமுதே`` (தி.8 பிடித்த பத்து, 3) என அன்பையும், சிவனையும் ஓரிடத்து வேற்றுமைப்பட ஓதினாராயினும், `இன்பமே என்னுடை அன்பே`` (தி.8 கோயில் பதிகம், 1) எனப் பிறிதோரிடத்தில் ஒன்றாகவே ஓதினமை காண்க. ``இன்பில் இனி தென்றல் இன்றுண்டேல் இன்றுண் டாம் - அன்பு நிலையே அது`` 3 என்றார் திருவருட்பயனிலும் (பா.80).
இதனால் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.