ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்

பதிகங்கள்

Photo

சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தில் நில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்தல் துரியத் துறுபே ரொளியே.

English Meaning:
Brahma Turiya Beyond Triple Turiya

Satya-Jnana Bliss is He
It is Sivananda light
That surpasses Thought;
It is Pure Brahma Turiya;
It is Turiya beyond Turiya;
In it arises the Light Transcendental.
Tamil Meaning:
உண்மையாயும், ஞானமாயும், உள்ள ஒப்பற்ற பரம்பொருள் அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கும். அந்த ஆனந்தம் ஆன்ம அறிவு இருந்துகொண்டிருக்கும் பொழுது இராது. (எனவே, ஆன்ம அறிவு தோன்றாத நிலையே அனுபவமாம்.) ஆயினும் ஆன்ம அறிவு உள்ளபொழுது மேற்கூறிய ஆனந்தத்தைக் காட்டுகின்ற அருள் ஒளி உளதாகும். (அந்த அருள் ஒளியால் சிவத்தை உணர்தல் சிவ தரிசனமாகும்.) அதன் பின் அருள் ஒளி ஆன்ம அறிவை விழுங்கி நிற்கும் நிலை நின்மல சிவ துரியமாகும். (இதுவே சிவயோகமாம்.) இத்துரியத்துள் விளங்குகின்ற அருள் ஒளியே ஆனந்த அனுபவமாகிய பர துரியத்துள் ஆன்மாவைச் செலுத்து.
Special Remark:
``நில்லா`` என்னும் எதிர்மறைப் பெயரெச்சம், ``சிவானந்தம்`` என்பதனோடு முடிந்தது, சிவானந்தப் பேரொளி - சிவானந்தத்தைக் காட்டும் பேரொளி. சுத்தம் - நின்மலம். அஃதாவது மலம் நீங்கினும் அதன் வாசனை நீங்காமையால் ஆன்ம அறிவு `யான், எனது` என முனைந்து நிற்றல் இன்மை எனவே, இம்முனைப்பின்றி பேரொளியாம் நிற்றலே சுத்தப் பிரம துரியம் ஆதல் அறிக. சிவத்தை, ``பிரமம்`` என்றார். ``துரியம்`` என்றதன்பின், ``துரியத்துள்`` என்றது. `அதனினும் மேலான துரியத்துள்` என்றதாம். ``உய்த்தல்`` என்னும் தொழிற்பெயர் உய்ப்பதாகிய வினைமுதலைக் குறித்தது. இதன்பின் ``துரியம்`` என்றது, முற்கூறிய பிரம துரியத்தை.
இதனால், `ஆனந்த அனுபவமே சிவபோக நிலை` என்பதையும் அருள் அனுபவம் `சிவ யோக நிலை` என்பதையும் விளக்கும் முகத்தால், அவற்றிற்கு முன் நிற்கும் சிவ தரிசன நிலை உயிர் சிவஞானம் கண்ணாகச் சிவத்தை உணரும் நிலை என்பது கூறப்பட்டது.