ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்

பதிகங்கள்

Photo

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
முன்னி யவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.

English Meaning:
Seek Him There Within

He who stands thus
Of Him you think;
Seek His Presence;
He ends the imperfections
Of those who seek Him;
He is the unwritten Veda immutable;
He is of Tapas great
He stands within the head;
For sure it is.
Tamil Meaning:
முன் மந்திரத்திற் கூறியவாறு மலர்க் கந்தம்போலத் துள்ளி நிற்கின்ற சிவன் தன்னை நினைந்திருப்பவர் குறையை முடிப்பவன். வேதத்தை ஓதும் அயன், மற்றும் மால் முதலியோருடைய தலைக்குள் இருந்து அறிவைப் பிறப்பிப்பவனும் ஆவன். ஆகையால் அவனையே நினைத்து அவன் திருமுன்பில் இரு.
Special Remark:
`இருப்பின் உனக்குக் குறை உண்டாகாது` என்பதாம். இரண்டாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``கேள்வி`` என்றது `சுருதி` என்றபடி. சிவனது திருமுன்பிலே (சந்நிதியிலே) இருத்த லானது புற உலகை நோக்கும்பொழுதும் அவற்றின் இயல்பினைச் சிவனது அருளாகவே கண்டிருத்தலாம். ``மறையவன், மாதவன்`` என்றது உபலக்கணம்.
இதனால், சிவனைச் சேர்ந்திருப்பவர் செம்மையராய் விளங்குதல் கூறப்பட்டது.