ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்

பதிகங்கள்

Photo

உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

English Meaning:
He is the Fragrance in the Flower Within

He is Sentience, He is Life;
He is union, He is separation;
He is Continuity beyond thought;
He stands in the fragrance of flower within.
Tamil Meaning:
பொருள்களை உணர்தற் கருவியாகிய உணர்வும், அவ்வுணர்வினால் பொருள்களை உணர்கின்ற உயிரும், உணரப்பட்ட பொருள்களை விரும்பும் விருப்பமும், வெறுக்கின்ற வெறுப்பும் எல்லாம் சிவன் ஒருவனே. அனைத்துப் பொருள்களையும் தக்கவாற்றால் இயைத்துச் செயற்படுத்துகின்ற அவன் பிறர் ஒருவராலும் தனியே நினைக்கவும் வாரான். ஆயினும் கொத்தாய் உள்ள மலர்களினின்றும் மணம் கமழ்வது போல அனைத்துப் பொருளின் செயற்பாட்டில் அவன் விளங்குகின்றான்.
Special Remark:
`அவனை அத்தன்மையனாக உணர்தல் வேண்டும்; ஞானிகள் அவ்வாறு உணர்ந்திருப்பர்` என்பதாம்.
`எல்லாம் அவனே` என்றல் அவன் அவற்றில் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றியாம். ``அவன்`` என்பது பண்டறி சுட்டு. ``புணர்வு`` என்பது, விடாது பற்றுதல். அஃது அதற்கு ஏதுவாய விருப்பத்தைக் குறித்தது. ``இணரும்`` என்பது பெயரடியாகப் பிறந்த பெயரெச்ச வினை. `இணராக்கும்` என்றபடி. இணராக்கல் - கொத்தாக்கல். துணர் - பூங்கொத்து. `கந்தம் போல` என உவம உருபு விரிக்க.
இதனால், `அனைத்துப் பொருள்களின் செயற்பாட்டினையும் அவனது செயலாக உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
``எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு``
-திருக்குறள் - 355.
என்றார் திருவள்ளுவரும்.