ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை

பதிகங்கள்

Photo

மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையும் கழனி கடல்தொறும்
ஊடும் உருவினை உன்னகி லாரே.

English Meaning:
They See Him Not

The light within unkindled
They, their lives, end;
These men gather in crowds
And seek Him not;
In fields, forests and hills
Nandi who is immanent in them,
They see not.
Tamil Meaning:
பாசக் கூட்டம் மறைக்கின்ற மறைப்பு நீங்கி உடல் வீடும் மனிதர்கள் உடலில் இருக்கும்பொழுது, ``மாயோன் மேய காடுறை யுலகம்``3 என்பது முதலாக முறைப்படுத்துச் சொல்லப்பட்ட நால்வகை நிலங்கள் தோறும் உள்ளிடத்துச் சிவபெருமான் கொண்டிருக்கும் திருவுருவங்களைக் குறித்துச் சென்று வணங்கியிருந்து, உடல் நீங்கிய பொழுது பேரின்ப வடிவினனாகிய சிவபெருமானை அடைந்து அவனோடு இரண்டறக் கலப்பர். ஆயினும், பாசக் கூட்டத்தின் மறைப்பு நீங்கப்பெறாத மனிதர்கள் அத்திருவுருவங்கள் எங்கும் இருப்பினும் அவைகளைப் பற்றி யாதும் நினைக்க மாட்டார்கள்,
Special Remark:
`மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் காடும் ... ... ... ... உருவினைக் குறித்து நந்தியவனை (அடைந்து) உடன் கூடுவர்; (பிறர்) உன்னகிலார்` என இயைக்க. ``அவன்`` பகுதிப் பொருள் விகுதி. ``குறிகளும் அடையாளமும் கோயிலும் - நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்``9 நிலமெங்கும் உள்ளனவாகவும் பாசத்தால் மூடப்பட்டுக் கிடக்கும் மனிதர்கள் அவற்றைச் சிறிதும் நோக்குதல் இல்லை. அதனால், அவர்கள் உடல்விட்ட பின்பு` அடையும் நிலை யாது எனக்கூறி இரங்கியவாறு, ``மூடுதல் இன்றி`` என முன்னர்க் கூறப்பட்டமையால், பின்னர் அதன் மறுதலை வருவிக்கப்பட்டது. அவர்கட்கு மேற்கூறியl ``நரகம், சுவர்க்கம், மேதினி`` என்னும் மூன்று உலகங்களுள் யாதானும் ஒன்றிற்சென்று பிறத்தலே கதி என்பது குறிப்பெச்சம். `பிறப்பதற்கே தொழிலாகி, இறக்கின்றாரே`` 8 என்று அருளிச்செய்ததையும் நோக்குக.
இதனால், `சிவநெறியை உணராதவர் மறுமையில் அடையும் நிலை இரக்கத்திற்கு உரியது என்பது கூறப்பட்டது.