ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை

பதிகங்கள்

Photo

திடலிடை நில்லாத நீர்போல ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லாக் கலம்சேரு மாபோல்
அடல்எரி வண்ணனும் அங்குநின் றானே.

English Meaning:
Lord is the Haven for Soul`s Ship

As water from upland
Downward flows,
Truth in body remains not;
That Truth He in me showed;
As the ship in the seas
That seeks the shores,
To my trouble-tossed soul
The Fire-Hued Lord
As sure goal stood.
Tamil Meaning:
மேட்டு நிலத்தில் பொழியப்பட்ட மழைநீர் அங்கு நிலைத்து நில்லாது நீங்குவதுபோல, வினையால் உடம்பினிடத்துச் சேர்க்கப்பட்ட உயிர் அதன்கண் நிலைத்து நில்லாது நீங்குவதாகும். ஆயினும், தழல் வண்ணனாகிய சிவனும் அவ்வுயிரோடு கூட அவ்வுடம்பின்கண் நிற்கின்றான். ஏனெனில், கடலிடத்தே நில்லாது கரையையே சேர்வதாகிய மரக்கலம் கடலிடை நின்றாருடன் தானும் நிற்பதுபோல, உயிரைப் பந்தத்தினின்றும் விடுவித்து வீட்டை அடைவித்தற் பொருட்டாம்.
Special Remark:
கருத்து நோக்கிச் சொற்கிடக்கை முறையானன்றி இவ்வாறு உரை கூறப்பட்டது. உவமம் சுட்டிக் கூறா உவமமாய் நின்றமையால் அதனால் விளக்கப்படும் பொருள் இறுதியில் விரித்துரைக்கப்பட்டது. இடையில் நின்ற காட்டுதல் (அறிவித்தல்) வினை பொருட்கே உரியது ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவர்``3 என்றது காண்க.
`கடலிடைப்பட்டவர் மரக்கலம், அல்லது புணையைப்பற்றி யின்றித்தாமே கரைசேர மாட்டாமைபோலப் பிறவியுட்பட்ட உயிர்கள் இறைவனைப் பற்றியன்றித் தாமே கரை சேரமாட்டா` என்பதும், `அதனால் இறைவன் தனது கருணை காரணமாகப் பிறப்புடைய உயிர்களோடு உடனாய் நின்று அவற்றை வீடடைவிக்கின்றான்` என்பதும் இங்குக் கூறப்பட்ட பொருள்கள்.
``பிறவிப் பெரு கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவ னடிசேரா தார்``9
என்றார் திருவள்ளுவரும் `மறு பிறப்பு இல்லை` என்பாரைத் தவிர, ஏனையோர் பலர்க்கும் `உயிர்கள் பிறவியுட் பட்டன` என்பது உடன்பாடு. அதனால், அவர்கள் அனைவரும் இம்மந்திரத்திற்கூறிய உவமையை உடன்படுவர் மேற்காட்டிய திருக்குறளும் `மறுபிறப்பு உண்டு` என்பார்க்குக் கூறுவதாய் எழுந்ததன்றி `மறு பிறப்பு இல்லை` என்பார்க்குக் கூற எழவில்லை. ஆகவே, `பக்தி` என்பது உண்டு என்பது உவமையாலும் விளக்கப்பட்டதாம்.
இதனால், பரகதி உண்மை உவமையில் வைத்து விளக்கப்பட்டது.