ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை

பதிகங்கள்

Photo

பறப்பட்டுப் போகும் புகுதும்என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைத் தெய்வம்என் றெண்ணி
அறப்பட் டமரர் பதி யென் றழைத்தேன்
இறப்பற்றி னேன் இதிங் கென்னென்கின் றானே.

English Meaning:
God Responds to Devotion

Into my thoughts He comes and goes;
In the constancy of my thoughts
I held Him as God;
``You my Holy Lord!``
Thus I besought Him;
And in my heart I held Him close;
``What is this here?`` He asks.
Tamil Meaning:
பிராண வாயு வெளியே செல்லுங்கால் தானும் வெளிச்சென்றும், அஃது உள்ளே வருங்கால் தானும் உள்ளே வந்ததும் இவ்வாறு உழல்கின்ற எனது மனத்தின் அலைவுக்கிடையே அந்தப் பிராணனை அடக்கியதனால் நிலைபெற்ற சித்தத்தையே பரம் பொருளின் இருப்பிடமாகக் கருதி, அவ்விடத்தில் நின்றே, `புண்ணியங்களின் பயனாய் எதிர்ப்படுகின்ற தேவதேவனே என்று அழைத்தேன் அங்ஙனம் ஒருமுறை யழைத்ததோடன்றித் தொடர்ந்து பன்முறை அழைத்து அவனை உள்ளத்தால் இறுகப் பற்றினேன் அதன்பின்பு அவன் தோன்றி, `நீ இங்கு என்ன செய்கின்றார்` என்று வினாவுகின்றான்.
Special Remark:
ஆகவே, உடம்பு நீங்கியபின் நான் அடையத் தக்க கதி அவனே` என உணர்ந்தேன் என்பது கருத்து `அதனால், பரகதி இல்லை என்பாரது கூற்று எனக்கு நகை விளைக்கின்றது` என்பதாம் போவதும், புகுவதுமாய் உள்ள நெஞ்சு நிற்றலைக் குறித்தமையால், அவ் விரண்டிற்கும் காரணம் வருவித்துரைக்கப்பட்டது. நெஞ்சு, விடாத ஆகுபெயர். மனம் அலையின் சித்தம் ஒன்றையும் சிந்தியாதாக, அது நிலைத்தவழியே சித்தம் ஒன்றை ஆழ்ந்து சிந்தித்தலின் `திறப்பட்ட சிந்தை`` என்றதற்கு ஏற்ப மனம் நிலைபெற்றமை பெறப்பட்டது. திறப்படுதல். வலியுடைத்தாதல். ``அடியார் சிந்தையுள் தேனூறி நின்று``* ``கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும் - தேனவன்காண்``* என்றாற்போலும் சுருதிகளின் வழிநின்று, திறப்பட்ட சிந்தையைத் `தெய்வம்` என்று எண்ணினார் என்க. அறப் பட்ட - அறத்தால். வெளிப்பட்ட. `பட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``பட்ட`` என்பது, ``பதி`` என்பதனோடு முடிந்தது. சிந்தையில் இருப்பவனை அழைத்தல் சிந்தையாலேயாம். எனவே அவ்வாறு, பன்முறை பாவித்தலாயிற்று. `ஒரு நாள் அழைத்துவிட்டு விடாமல், பல நாள் அழைத்தல் வேண்டும்` என்பது,
``பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து
பன்னாள் அழைத்தால்,
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான்
என்று எதிர்ப்படுமே``3
``அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய்! - இரங்குமேல்
என்னாக வையான்! தான் எவ்வுலகம் ஈந்தளியான்!
பன்னாள் இரந்தாற் பணிந்து.``9
என்றாற்போலும் திருமொழிகளால் விளங்கும். அதனால், ``இறப்பற்றி`` என்றால் ``இங்கு இது என் என்கின்றான்`` என்றது, `என்னோடு கலந்து உறவாடுகின்றான்` என்றபடி.
இதனால், `பரகதி உண்டு` என்பது இவ்விடத்திற்றானே அனுபவமாய் விளங்கும் என்பது கூறப்பட்டது.