ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்

பதிகங்கள்

Photo

பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்(து)
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடன்இருந்(து) ஒன்றாய் அன் றாமே.

English Meaning:
God`s Multiple Forms

The Primal One, the indivisible Great
Himself into several divided;
As Form, Formless and Form-Formless,
And as Guru, and as Sakti-Lord
In Forms numerous
He immanent in Jivas became
And transcendent too.
Tamil Meaning:
மகா மாயையை முதலாக வைத்து எண்ணுகின்ற காரணங்களையும், அவற்றின் காரியங்களையும் வேறு வேறு வகைபடத் தோற்றுவித்து, அவற்றை அங்ஙனம் செய்தற்கு ஏற்ற `அருவம், உருவம், அருவுருவம்` என்னும் மூவகைத் திருமேனிகளைக் கொண்டு, மூவகை நிலையில் நின்று, முடிவில் குருவாகியும் வந்து ஆட்கொள்கின்ற அருளாளனாகிய சிவன், அளவில்லாத உயிர்களிலும் அவ்வவற் -றோடும் சேர்ந்து உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும், கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் உள்ளான்.
Special Remark:
``வாய்`` என்பது `வாயில்` என்னும் பொருட்டாய், `காரணம்` எனப் பொருள் தந்தது. உலகத்திற்கு உரிய முதற் காரணங்களில், `மகா மாயை` எனப்படும் சுத்த மாயையே பெரிதாகலின் அதனைப் ``பெருவாய்`` என்றார். `முதலாக` என ஆக்கம் வருவித்துக் கொள்க. அதனை முதலாக வைத்து எண்ணுமாறு `மகா மாயை, மாயை, பிரகிருதி` என இம்முறையால் எண்ணுதலாம். பேதம் வகை. காரணங்கள் இயல்பிலே வேறுபட்டிருப்பினும், அவ் வேற்றுமையை உயிர்களின் தகுதி வேறுபாடுகளுக்கு ஏற்பப் பொருத்துதலின், அங்ஙனம் பொருத்துதலையே காரணங்களையும் சிவனே பேதித்ததாகக் கூறினார். காரண வேறு பாட்டிற்கு ஏற்பக் காரியங்களை வேறு வேறாகச் செய்பவன் சிவனே யாதல் தெளிவு. செய்யுள் நோக்கி, அருவுருவம் இறுதியில் வைக்கப்பட்டது. அருவம் முதலிய மூவகைத் திருமேனிகளின் நிலை, `இலயம், போகம், அதிகாரம்` என்பனவாம் என்பது மேலெல்லாம் சொல்லப்பட்டது. `உடனாய், ஒன்றாய்,வேறாய் இருத்தலே அத்துவிதமாய் இருத்தலாம்` என்பது சித்தாந்தம் ஆதல் வெளிப்படை.
``உலகெலா மாகி வேறாய்
உடனுமாய்``3
என்பது சிவஞானசித்தி.
``ஈறாய், முதல் ஒன்றாய், இரு பெண் ஆண், குணம் மூன்றாய்,
மாறாமரை நான்காய், வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறார்சுவை, ஏழோசையொடு, எட்டுத்திசை தானாய்,
வேறாய், உடன் ஆனான் இடம் வீழிம்மிழ லையே``l
என்னும் திருமுறைத் திமொழியும்,
``ஈறாகி அங்கே, முதல்ஒன்றாய் ஈங்கிரண்டாய்,
மாறாத எண்வகையாய், மற்றிவற்றின் - வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை யென்றும்
கடனாய் இருக்கின்றான் காண்``8
என அதனை எடுத்துக்காட்டி நிறுவிய சாத்திர யாப்பும் கண்டுணரற் பாலன. சத்தி கோன் சத்திக்குத் தலைவன். ஞானேச்சாக் கிரியா சத்திகளைக் கொண்டு செயலாற்றும் முதல்வன் `பதி` எனப்படுபவன் இவனே. இந்நிலை தடத்தமேயாகலின் இவனை இங்கு, `சிவன்` எனக் கொள்க. `பன்மையில்` என உருபு விரிக்க. ஈற்றில் ``உருவாய்`` என்றது, உயிர்தோறும் தனித்தனிப் `பொருந்தும் பொருளாய்` என்றபடி.
இதனால், முச்சொரூபத்துள் சிவ சொரூபத்தின் இயல்புகள் வகுத்துரைக்கப்பட்டன.