ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்

பதிகங்கள்

Photo

ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்
தாறிய ஞானம் சிவோகம் அடைந்திட்டு
வேறுமென் மேல்முச் சொரூபத்து வீடுற்றங்(கு)
ஈறதில் பண்டைப் பரன்உண்மை எய்துமே.

English Meaning:
Beyond Triple Muktis is God

As you ascend,
Attenuate Malas Five
And espouse ``So-ham``
That is Jnana filled;
And be liberated
Attaining Svarupa Mukti triple;
And in the End,
Vision Truth of Para (Siva) Eternal.
Tamil Meaning:
பெத்தம் தடத்தமாக, முத்தியே சொரூபம் ஆதலின், முன் அதிகாரத்தில் கூறிய மும்முத்திகளையே இவ்வதிகாரத்தில் `முச்சொரூபம்` என ஏழு மந்திரங்களால் வேறொரு வகையாக விளக்குகின்றார். `பெத்தம் தடத்தமே, முத்தியே சொரூபம்` என உணர்தலே இவ்வதிகாரத்தின் பயன். (தடத்தம் - செயற்கை, சொரூபம் - இயற்கை.)
`ஆணவம், திரோதாயி, மாயை, மாயேயம், கன்மம்` என இவ்வாறு ஐந்து மலங்களும் ஆன்மாவை வந்து பற்றி, ஒன்று, இரண்டு, மூன்று`, என இவ்வாறு தொகை மிகுந்த முறையிலே அவற்றினின்றும் ஒவ்வொன்றாக நீங்கி, முழுதும் விடுபட்ட ஆன்ம ஞானம், பின் `சிவோகமஸ்மி` என்னும் அனுபவத்தைப் பெற்று, அதற்குப் பின்னும் மேலே மேலே சென்று முச்சொரூபமாகிய மும்முத்திகளைப் பெற்று, முடிவில் அநாதியான சொரூப சிவனை அடைந்து நலம் பெறும்.
Special Remark:
மலம் ஐந்தும் ஏறிய முறையே நீங்குதலாவது, பிராரத்த கன்மம் நீங்க, அதனால் வந்த மாயேயம் நீங்குதலும், காரியமாகிய மாயேயம் நீங்கவே காரணமாகிய மாயையும் நீங்குதலும், கன்மம், மாயேயம், மாயை இவைகளைச் செலுத்தி நிற்பதே திரோதாயி ஆதலின் இம்மூன்றும் நீங்க, திரோதாயியாய் அவற்றைச் செலுத்தி நின்ற சத்தியும் அந்நிலை மாறி அருட் சத்தியாய் ஆன்ம அறிவிற் பதிதலும், அஃது அவ்வாறு பதியவே, ஆணவம் நீங்குதலுமாம்.
`எறிய மலம் ஐந்திடை அடைந்தவாறே ஆறிய ஞானம்` என்க. ஆறுதல் - தணிதல்; நீங்குதல். ஞானம், இங்கு ஆன்ம ஞானம். முன் அதிகாரத்தில் கூறப்பட்ட, `சீவன் முத்தி, சிவமுத்தி, பர முத்தி` என்பனவே இவ்வதிகாரத்தில் ஆன்ம சொரூபம், சிவ சொரூபம், பர சொரூபம், என மூச்சொரூபங்களாக வைத்து உணர்த்தப்படுகின்றன. அவற்றுள் ஆன்ம சொரூபம், ``ஆறிய ஞானம்`` என்பதனாலும், சிவ சொரூபம் ``சிவோகம் அடைந்திட்டு`` என்பதனாலும், பர சொரூபம், பண்டைப்பரன் உண்மை எய்தும், என்பதனாலும் இங்கு உணர்த்த ப்பட்டன. தச, காரியத்துள் தத்துவரூபம் முதல் ஆன்ம தரிசனம் ஈறாக உள்ளவை ஆன்ம சொரூபமாகவும், சிவயோக சிவ போகங்கள் சிவ சொரூபமாகவும், பரமுத்தி நிலை பர சொரூபமாகவும் வைத்து உணர்த்தப்படுதல் அறிக. சிவ ரூபம் ஆன்ம தரிசனத்துள்ளும், ஆன்ம சுத்தியும், சிவ தரிசனமும் சிவபோகத்துள்ளும் அடங்கும்.
பின்வரும், `பரன் உண்மை எய்துதலையும் உடன் வைத்து, ``முச் சொரூபத்து வீடுற்று`` என்றார். பண்டு - அனாதி.
இதனால், `முச்சொரூபமாவன இவை` என்பதும், அவற்றின் இயல்பும் கூறப்பட்டன.