ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்

பதிகங்கள்

Photo

உலகம் புடைபெயர்ந்(து) ஊழியும் போன
நிலவும் சுடரொளி மூன்றும்ஒன் றாய
பலவும் பரிசோடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர்அறி வாரே.

English Meaning:
Lord`s Vastness

The Worlds tumbled,
The aeons passed;
The three Lights,
Sun, Moon and Fire
One became;
All in Benevolent Lord merged;
Who knows His vastness and greatness!

Tamil Meaning:
உலகங்கள் எல்லாம் ஒடுக்க நிலையை எய்தி விட்டன. அதனால், உலகம் உள்ளளவும் இருந்த அந்த ஊழியும் போய், அடுத்த ஊழி வரும் நிலைமை தோன்றி விட்டது, உலகம் உள்ள பொழுது விளங்கிக்கொண்டிருந்த, `ஞாயிறு, திங்கள் தீ` என்னும் முச்சுடர்களும் காரண நிலையில் ஒன்றாகி விட்டன. இவை போல எல்லாப் பொருள்களும் தம் தம் காரண நிலைகளை எய்தி விட்டன. ஆயினும் பரமசிவன் முன் இருந்தவாறே இருக்கின்றான் என்றால், அவனது நீளத்தின் எல்லையையும், அகலத்தின் எல்லையையும் யார் அறிய வல்லார்!
Special Remark:
``பெயர்ந்து`` என்னும் எச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. `போயினது` என்பது, ``போன`` எனக் குறைந்து நின்றது. ஆய - ஆயின. பரிசு - தன்மை. காரியத்தில் தூலமாய்க் காணப்படும் இயல்புகள் காரணத்தில் சூக்குமமாய்க் காணப்படாது நிற்கும் ஆதலின் அங்ஙனம் நிற்பவனவற்றை, `தன்மை` என்றார். பான்மை - பகுதி; என்றது காரணப் பகுதிகளை, ``பான்மையுள்`` என்பதன்பின், `ஆயின` என என்னும் சொல்லெச்சம் வருவித்துக்கொள்க. நீள அகலங்கள் காலம் பற்றியும், இடம் பற்றியும் கொள்ளப்படும். பரம் பொருள், `நித்தியம்` ஆதலின் கால அளவைக் கடந்ததும், எல்லாப் பொருளும் தன்னில் வியாப்பியமாய் நிற்க, தான் எல்லாவற்றிற்கும் வியாபகமாய் நிற்றலின் இடத்தைக் கடந்ததும் ஆயிற்று, அவற்றையே, ``அளவும், பெருமையும் ஆர் அறிவார்`` என்றார். ``ஆர் அறிவார் அவ் அகலமும் நீளமும்``* என முன்னருங் கூறினார். ``நீள அகலம் உடையாய் போற்றி``* என்றதும், ஏனையெல்லாப் பொருட்கும் வியாபகமாய் நிற்றலையே குறித்தது. இதிலும் ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால் முச்சொரூபங்களுள் பர சொரூபத்தின் பெருமை விளக்கப்பட்டது.