ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்

பதிகங்கள்

Photo

தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பிற்காணும் தூடணந் தானும் பிறழ்வுற்றுத்
தற்பர கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடக ராதியே.

English Meaning:
In Tap-Para Union is Aum

The Purity State
That Self-Realization brought,
The Expansive State within it,
The Malas that affected Jiva before
All these passing,
Seek the Para-atita State
Where the Tatpara and the time-bound Jiva that
Para became
Commingle Into one letter
That with ``A`` begins; ``Aum.
Tamil Meaning:
ஆன்மா தன்னைத்தான் வேறு `தத்துவங்கள் வேறு` என உணர்தல் ஆன்ம தரிசனமாம். அதன்பின், கருவிகள் நீங்கிய பின்பும் தனக்கு அறிவு நிகழக் காணுதலால் `எஞ்ஞான்றும் தனக்கு அறிவைத் தருவது சிவமே` என உணர்ந்து சிவனது அறிவையே தனது அறிவிற்குப் பற்றுக் கோடாக உணர்ந்து, அவன் அறிவினாலே அவனை நோக்குதல் சிவதரிசனமாகும். இவ்விடத்தில் ஆன்மசுத்தியும் ஓரளவு உடன் நிகழும். பின்பு அங்ஙனம் உணரப்பட்ட சிவனிடத்தில் தான் அடங்கி அவனேயாய் நிற்றல் சிவயோகமாகும். இந்நிலையில் ஆன்ம சுத்தி நிறைவுறும். அதனால், பின்பு பிரபஞ்சம் காட்சிப்படினும் ஆன்மா அதனைப் பற்றாது ஒதுக்கிவிடும். இம்மூன்று நிலைகளையும் தாண்டிய பொழுது, காலத்தைக் கடந்து நிற்றலால், `கால பரம்` என்னும், ஆன்மாவைக் கடந்து நிற்றலால், `தற்பரம்` என்றும் சொல்லப் படுகின்ற பசுபரம் தோன்றும். பின் அதனோடு ஒற்றுமைப் படுதல் நின்மல துரியாதீதமாகும். இஃது இம்மையில் அம்மையாம் ஆன்ம லாபமாகும். இவற்றிற்குப்பின் தேகம் நீங்கப் பரசிவத்தில் கலத்தல் பரதுரியாதீத மாகும். இவற்றை யெல்லாம் தெரிந்துணர்தல், அகரத்தை முதலாக உடைய எழுத்துக்களால் ஆகிய நூல்களினாலேயாம்.
Special Remark:
தூயம் - தூய்மை. நன்மை, வன்மை, முதலிய சில பண்புப் பெயர்கள் மையீறு பெறாது, `நலம், வலம்` என்றாற் போல அம்மீறு பெற்று வருதல் பற்றி. `தூய்மை` என்பதை, `தூயம்` என்றார். இது நாயனாருடைய தனித்ததோர் ஆட்சி. ``கண்டதூய்மை`` என்பது `கண்டதனால் வரும் தூய்மை` எனப்பொருள் தந்து நின்றது. ஆன்ம தரிசனத்தையே, ``தற்கண்ட``என்றும், ஆன்ம சுத்தியின் முதல் நிலையையே ``தூய்மை`` என்றும், அதன் முடிநிலையை ``தன்னில் விலாசம்`` என்றும், சுத்தி பெற்ற ஆன்மாப் பின்னர் பிரபஞ்சத்தால் தாக்குண்ணாமையே ``தூடணம்`` என்றும் கூறினார். விலாசம் - விளக்கம். தன்னில் விலாசம் - சிவத்தில் வியாப்பியமாய் மாசுபற்றா திருக்கை பிறழ்தல் - மாறுதல். அஃது இங்கு நீங்குதல் மேற்று. `ஆன்ம சுத்தியையும் கடந்தது? என்றமையால், பின்னிரண்டடிகளில் ஆன்ம லாபம் கூறப்பட்டதாம். ``பரம்`` என்று அதன் தோற்றத்தை. ``கலந்து`` என்றது, `கலந்தபின்` என்றபடி. `கலந்துபின்` என்றதனால், கலத்தலும் பெறப்பட்டது. `கலந்த பின் உளதாம் பராதீதம்` என்க. இதனை ``அற்ற அதீதம்`` என்றது, `தேகம் நீங்கிய பின் நிகழும் அதீதம்` எனறபடி. நின் மலாவத்தையும், பராவத்தையும் அனுபவத்தில் சொல்லிறந்து நிற்பனவாயினும், அவற்றை முதற்கண் நூல்களால் உணர்ந்த வழியே முயற்சி கூடும் என்றற்கு ``நாடு அகராதி`` என்றார். நாடு, முதனிலைத் தொழிற்பெயர். அகராதி, அடையடுத்த ஆகுபெயர். `அகராதியால்` என உருபு விரிக்க.
இதனால், `முப்புரங்களில் தற்பரமாகிய பசுபரத்தை நூல்கள் வழியாக நுண்ணிதின் உணர்ந்து அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.