ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்

பதிகங்கள்

Photo

தோன்றிஎன் னுள்ளே சுழன்றெழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற் றிருந்த இளங்கொடி
நான்று நலஞ்செய் நலஞ்செயு மாறே.

English Meaning:
Parallel Yoga Way

In the encircling Spheres Three within me,
The Primal Lord appears;
I reached Him and was in bliss immersed;
I clung to the tender vine of Kundalini Sakti
That she, Her Grace may shower.
Tamil Meaning:
எனது உடம்பினுள்ளே உற்பத்தியாகி, கீழ்மேலாய் உள்ளது. யோக முயற்சியால் மேல் கீழாய்ச் சுழல்வதற்கு இடமாகின்ற மூன்று மண்டலங்கள் உள. (அவை `தீ, ஞாயிறு, திங்கள்` என்பன) அம்மண்டலங்கட்கு மேலேயுள்ள முதல்வனைப் பற்றியுள்ள ஓர் இளமையான கொடி, அவனைப் பற்றித் தொங்கிக்கொண்டு, உடல் நலத்தையும், உயிர் நலத்தையும் தருதல் அறியத் தக்கது.
Special Remark:
எனதாகிய உடம்பை `யான்` என்றே கூறினார். உடலில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் என்னும் அளவில் உள்ள பகுதி தீ மண்டலமாகவும், அனாகதம், விசுத்தி உள்ள பகுதி ஞாயிற்று மண்டலமாகவும், ஆஞ்ஞை, அதற்குமேல் உள்ள ஏழாந்தானம் உள்ள பகுதி திங்கள் மண்டலமாகவும் கொள்ளப்படும். இம் மூன்று மண்டலங் களையும் கடந்து துவாதசாந்தத்தில் விளங்குகின்ற சிவனே மண்டல பரம். பரம் ஆகின்றவனை, ``முதல்வன்`` என்றார். அவனைப் பற்றிக் கொண்டு மூலாதாரம் வரையில் தொங்கி, மூலா தாரத்தில், தலையை வைத்துத் தூங்குகின்ற பாம்பு வடிவாய் உள்ளது. குண்டலி சத்தி. அதனையே, ``ஏன்றெய்தி இன்புற்றிருந்த இளங்கொடி`` என்றார். இன் புறுதல், சுகமாகத் துயிலுதல். ``நான்று`` என்பதை, ``எய்தி`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `நலம் செய் ஆறு, நலம் தரும் ஆறு` எனத் தனித்தனிக் கூட்டுக. இருகாற் கூறியது உடல் நலத்தையும், உயிர் நலத்தையும் உணர்த்தற் பொருட்டு. யோக முயற்சியால் ஞானமே யன்றி, அதற்குமுன் உடல் நலமும் கூடுவது என்க. சுழல்கின்றது ஓர் மூன்று படி மண்டலம் - சுழலுகின்ற இடமாகிய ஒரு மூன்றடுக்கு மண்டலம். கீழ் மேலாகச் சுழல்வது, மேற்குறித்த குண்டலிசத்தி, யோக முயற்சியால் எழும் மூலாக் கினியால் விழித்தெழுந்து சுழலுதல், `அஃது` இங்ஙனம் எழுந்து சுழன்றே நலந்தரும்` என்க. `அறியத் தக்கது` சொல்லெச்சம்.
இதனால், முப்பரங்களுள் மண்டல பரம் பயன் தருமாறு கூறப்பட்டது.