ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்

பதிகங்கள்

Photo

ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம்
கூறா வுபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

English Meaning:
Beyond Para is Parasiva

Beyond Tattvas six times six
Is that Para;
When the unarticulated mantra
Is in Silence chanted,
Then appears Siva Para,
That is still above;
He is the God
Of whom Vedas speak;
Then shall Divine Rapture well up in you;
Do foster it, and enlarge.
Tamil Meaning:
பரம்பொருள், `முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டது` என உணரப்படும் பொழது `தத்துவ பரம்` எனப்படும். பொருளால் வேறாகாமை பற்றி முன்மந்திரத்தில், `மண்டல பரமே குருவாய் வந்து உணர்த்துவது` எனக் கூறப்பட்டதாயினும் அவ்வாறு வந்து உணர்த்துவது தத்துவ பரமே. பரம் பொருள் குருவாகி வந்து உணர்த்தியது சைவ வரலாற்றில் அன்றிப் பிற சமய வரலாற்றில் காணப்படாமையால், குருவாகி வந்து உணர்த்தும் தத்துவ பரம் சிவபரமே என்பது தெளிவு. அது செய்த உபதேசமும் சொல்லமாற் சொன்ன உபதேசமே. அஃதாவது, சின் முத்திரையால் உணர்த்திய உபதேசமே. அந்த உபதேச பரத்திற்கு வேறாய்வெளிப்பட்ட, வேதாகமங்களை அருளிச்செய்த சதாசிவ நாயனார் வெளிப்பட்டது. முற்கூறிய கூறா உபதேசம் இனிது தெளியப்பட்டு பயன் தருதற் பொருட்டாம். அவ்விரு மூர்த்திகளது செயலாலும் பயன்கொள்பவரால் அச்செயல்கள் மேலும் மேலும் இன்பம் பெருகும்படி நன்கு பேணப்படும்.
Special Remark:
``ஆறாறு தத்துவம்`` என முன்னர்க் கூறினமையால், ``அப்பரம்`` என்று, தத்துவபரம் ஆயிற்று. ``கூறில்`` என்னும் எச்சம், `கூறிற்றாயின்` எனத் தெளிவின்கண் வந்தது. `அது சிவபரமே` எனச் சுட்டு வருவித்து முடிக்க. `தத்துவ பரம் குருவாகிவந்து உணர்த்து மாயின், சதாசிவநாயனார் வேதாகமங்களை அருளிச் செய்தல் எதற்கு` என்னும் ஐயத்தை நீக்குதற்கு, ``பேறாக`` என்றார். பேறு பயன். ஆக - உண்டாதற் பொருட்டு. தென்முகக் கடவுள்பால் சென்று கேட்ட சனகாதி நால்வர் வேதாகமங்களை ஓதியுணர்ந்தபின், அவற்றின் பொருளைத் தெளிதற் பொருட்டுக் கேட்டாராயினும், பொதுவாக குரு உபதேசத்தைக் கேட்ட பின்பு அதனைத் தெளிதற்குப் பயன் படுவனவே வேதாகமங்கள் என்பது பற்றி, ``பேறாக`` என்றார். எனவே, தென்முகக் கடவுள் வரலாற்றை எடுத்துக்காட்டியது, முன் மந்திரத்தில், ``நேர்தரு நந்தியும் ஆம்`` என்றதற்கு அனுபவம் காட்டியதேயாம். வேதாகமங்களின் வழி மேலும் மேலும் சிந்தித்த பொழுதே குருவுபதேசம் நிலைபெற்றுப் பயன் தருவதாம். அதனையே, ``பேணும்`` எனக் கூறினார். பேணும் - பேணப்படும்.
இதனால், முப்பரங்களில், `தத்துவபரமாவது இது` என்பதும், அஃது உயிர்கட்கு அருள்புரியுமாறும் கூறப்பட்டன.