
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
பதிகங்கள்

எண்ணிலி இல்லி யுடைத்தவ் விருட்டறை
எண்ணிலி இல்லியோ டேகிற் பிழைதரும்
எண்ணிலி இல்லியோ டேகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லத்தோர் இன்பம தாமே.
English Meaning:
Control Desires, and Attain BlissCountless the holes
In this body`s chamber dark;
If with the countless holes (desires) I run,
Faulty will my lot be;
If you run hot
With the countless holes of desires,
Countless indeed the bliss you attain.
Tamil Meaning:
ஒரு தலைவன் எனக்கென ஓர் அறையை ஈந்துள்ளான். (தலைவன் - பிரமன். அறை - உடம்பு) அதில் உள்ள பொத்தல்களோ அளவில்லன. (மயிர்க்கால்கள்) ஆயினும் அந்த அறைக்குள்ளே சிறிதே ஒளிபுகாது இருட்டிக் கிடப்பது வியப்பைத் தருகின்றது. (ஞானம் உடம்பு வழியாக வாராமை தெளிவு,) இந்த இருட்டறையிலேதான் என்னுடைய காலமெல்லாம்போய் ஆக வேண்டும் என்றால், அஃது எத்துணைத் துன்பத்தைத் தரும் என்பது சொல்லவேண்டுவதில்லை. ஆயினும் இறைவன் என்னை அவ்வறை யிற்றானே யிருந்து காலந் தள்ளாமல் காக்கத் திருவுளம் பற்றுவா னாயின், உடனே எனக்கு அளவுட்படாத கலத்தையுடைய ஒரு பெரிய மாளிகையைத்தரின் ஒப்பற்ற பெரியதோர் இன்பம் கிடைத்துவிடும். (அம்மாளிகை வியாபகப் பொருளாகிய திருவருள். இன்பம், சிவானந்தம்.)Special Remark:
`திருவுளம் பற்றுவானா` என்பது குறிப்பெச்சம். ``அவ் விருட்டறை`` எனச் சுட்டிக் கூறினமையால், `அஃது ஒருவனால் தரப் பட்டது` என்பது பெறப்பட்டது. ``அறை`` என்றார், எண்சாண் நீளமும் இருசாண் அகலமுமே உடைமையின். ஏகுதல் - செல்லுதல், காலம் போக்குதல். `பீழை` என்பது குறுகி நின்றது. மூன்றாம் அடியில் ``இல்லி`` என்றது ஆகுபெயராய் அவற்றையுடைய அறையைக் குறித்தது. `காத்தல்` என்பது அதன் காரணம் உணர நின்றது.இதனால், `ஐந்திந்திரியத்தை அடக்குதற்குத் திருவருள் துணை புரிய வேண்டும்` என்பது கூறி அத்துணை கிடைத்தல் அருமையாதலின் ஐந்திந்திரியங்களை அடக்குதலும் அருமையாதல் கூறப்பட்டது. திருவருள் துணைகிடைத்தலின் அருமை முன் மந்திரத்தில் கூறியவாற்றால் இனிது விளங்கும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage