ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை

பதிகங்கள்

Photo

கருத்தின்நன் னூல்கற்றுக் கால்கொத்திப் பாகன்
திருத்தினும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா(து)
எருத்துற ஏறி யிருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே.

English Meaning:
Difficulty of Training Senses

Attentively learning holy lore
And coursing breath in Yogic way,
Unless the rider (Jiva) thus trains,
The restless steed (Senses),
Its Wayward course takes;
Firm may the rider on its neck sit
And hard the punishment be administers,
Yet the animal forward moveth not.
Tamil Meaning:
இதுவும் ஒட்டணி. அடங்காமையை ஐம்பொறி மேல் வைத்துக் கூறினும் அடங்காது ஓடுவது மனமே. ஓட்டத்தின் விளைவு குறித்து மனம் குதிரையாக உருவகிக்கப்படும். பாய்மா - குதிரை. குதிரையைப் போரின்கண் செயற்படுத்தும் வீரன் அதன் முதுகின் மேல் அமர்ந்துகொண்டு கால்களால் குறிப்புத் தருவான். நல்ல குதிரைகள் அக்குறிப்பின் வழியே பாய்ந்து பாகனுக்கு வெற்றியை உண்டாக்கும். முருட்டுக் குதிரைகள் முரணி வேறுவழியிற் பாய்ந்து பாகனுக்கு வீழ்ச்சியைத்தரும். இங்கு ``பாய் மா`` என்றதை, `குறிப்பிட்ட ஒரு பாய்மா` எனக் கொள்க. அது மனம். அதனைப் பிராணாயாமத்தால் அடக்குதல் கூடும். ஆகவே ``கால்`` என்றது சிலேடை வகையால் உவமையில் பாகனது கால்களையும், பொருளில் பிராண வாயுவையும் குறித்தது. கொத்துதல் - உட்செலுத்துதல். பாகன், ஆன்மா. அவன் யோகநூலைக் கருத்துடன் கற்று அதன்படி பிராணா யாமம் செய்து தாரணை நிலையில் நின்று அடக்கினாலும் அடங்காது ஓடுவதே மனத்தின் இயல்பு. உவமையில் `நூல்` குதிரை செலுத்தும் நூல். `எருத்தம்` என்பது ஈறு குறைந்து, ``எருத்து`` என நின்றது. எருத்தம் - பிடரி; இங்கு அது முதுகைக் குறித்தது. `முதுகு` என்றது தாரணை நிலையை. திருத்துதல் - பிராணாயாமத்தினாலும், வருத்துதல், அஃதாவது அடக்குதல். தாரணையினாலும் என்றற்கு அவற்றைத் தனித் தனிக் கூறினார். திகைத்தல் - வேறு வழியில் செல்லுதல். வழி, நேர்வழி. அம் மா - மேற் குறிப்பிட்ட அந்தக் குதிரை. ``திகைத்தன்றிப் பாயாது, வழி நடவாது` என்றவை, அடங்குதல் அரிதாதலையே குறித்தது.
Special Remark:
இதனால், `பொறி வழி ஓடும் மனத்தினை அடக்கி ஞான நெறியில் செலுத்துதல் யோகியர்க்கும் அரிது` என்பது கூறப்பட்டது.