ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை

பதிகங்கள்

Photo

புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
குலம்ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலமந்து போம்வழி ஒன்பது தானே.

English Meaning:
Harassing Senses Bring Sorrow

Five the Sense Organs,
Five the Sense-birds, (Jnanendriyas)
Five the Fields (Tanmantras)
The Sense-birds seek to feed,
Five the waters (Karmendriyas),
Five their functions,
Yet are they of one lineage;
And one the hunter (Jiva)
That herds them together;
Nine the exits of body
Where he in sorrow wanders.
Tamil Meaning:
மேய்ப்புத் தொழில் செய்து பிழைக்கும் குலங்கள் ஆமேய்க்கும் குலம், எருமை மேய்க்கும் குலம், ஆடு மேய்க்கும் குலம், தாரா, கோழி முதலிய பறவைகள் மேய்க்கும் குலம் எனப் பலவகை உண்டு. அவற்றுள் பறவை மேய்க்கும் குலத்தில் இரங்கத் தக்க ஒரு குலம் உண்டு. அந்தக் குலத்தில் ஒருவனுக்கு ஒரு குடில். அந்தக் குடிலில் ஐந்து கூடுகள். அந்தப் பறவைகள் வெளியே மேயும் இடங்களும் ஐந்து. அந்த இடத்தில் மேய்கின்ற உணவுகளும் வேறு பட்ட ஐந்து. அந்த உணவுகளின் குணங்களும் வேறுபட்ட ஐந்து. இந் நிலையில் அந்த மேய்ப்பான் ஒருவன் அந்தப் பறவைகளை ஒரு வழியிற் செலுத்தி மேய்க்க வேண்டும். இது மாற்ற முடியாத ஓர் அமைப்பு முறை - அதனால் இந்த மேய்ப்புத் தொழிலில் வெற்றி பெற மாட்டாதார் பலர் மேற்குறித்த ஒரு குடிலில் ஒன்பது வாயில்கள் இருப்பதால் அந்த வாயில்களில் எந்த ஒன்றின் வழியாகவாவது யாருக்கும் தெரியாமல் ஓடிவிடுகின்றார்கள்.
Special Remark:
இம்மந்திரம் பிசிச் செய்யுள். கூடு இங்கு, `புலம்` எனப்பட்டது. அவை தத்துவங்களில் ஞானேந்திரியங்களாம். அவை புறநோக்குடைய மனத்திற்கு இடமாதல்பற்றி, `புலம்` எனப்பட்டன. ஞானேந்திரியங்கள் `புலம்` எனவும் படுதல் வழக்காதல் அறிக. புள் - மனம். அஃது ஒன்றாயினும் மேற்குறித்த இடச்சார்பு பற்றி ஐந்தாகின்றது. நிலம் - மனம் பொறிவழியாகச் சென்று பற்றும் பொருள். ``ஐந்து`` என்றது, `ஐந்து வகை` என்றபடி. மேய்க்கப்படும் பறவைகள் நீரை விரும்புதல் பெரும்பான்மையாதல் பற்றி உணவு ``நீர்`` எனப்பட்டது. அவை அப்பொருள்களில் பொறிவழியாகக் கவரப்படும் உரு, ஊறு, நாற்றம், சுவை, ஓசை என்பன. நீர்மை - குணம். அவை நுகர்வாரது தன்மைக்கு ஏற்பப் பெரிதும் சிறிதுமாக அவரது அறிவையழித்தல். ``கொண்டு`` என்பதை, ``குலம் ஒன்று`` என்பதனோடும் கூட்டுக. ``ஒருவன்`` என்பதன்பின் ``இது நிலைமை`` என்னும் இசையெச்சம் வருவிக்க. உலமருதல் - உழன்று எய்த்தல். `உலமந்தவழி` என்பது `உலமந்து` எனத் திரிந்து நின்றது. ``போம் வழி ஒன்பது`` என் றதனால், `எந்தவழியாலாவது புறப்பட்டுப் போதல் எளிது` என்றபடி, வழி - வாயில், வாயிலைக் கூறவே, `அவை உள்ளது குடிலில்` என்பது தானே பெறப்பட்டது. `அஃது உடம்பு` என்க. ``ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்`` (தி.6 ப.99) என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், ஐந்திந்திரியங்கள் அடக்குதற்கு அரியனவாயுள்ள இயல்பினை விளக்கி, அதனால் அடக்க முயன்றோர் பலரது நிலையை எடுத்துக் கூறப்பட்டது.