ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை

பதிகங்கள்

Photo

ஆக மதத்தன ஐந்து களிறுகள்
ஆக மதத்தறி யோடணை கின்றில
பாகனும் எய்த்தவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.

English Meaning:
Do Not Delay to Control Senses

Five are the elephants (Senses)
That are in rut
Their rut increasing
They do not to the (Divine) Post remain tied;
As the mahout (Jiva) tires,
And the elephants (Senses) too, get their energy exhausted,
Then they turn to Yoga;
Why this way (they delayed) we know not!

Tamil Meaning:
இம்மந்திரம் ஒட்டணி. ஐந்து களிறுகள். ஐம்புலன் களின் மேல் செல்லும் ஐந்து அவாக்களையுடைய மனம் - மனம் ஒன்றாயினும் அவா வகையால் ஐந்தாயிற்று. ஆக மதத்தமை. மிகவும் மதம் கொண்டமை. அஃதாவது அவா மிக மிகுத்தமை. தறி - திருவருள். பாகன் - உயிர். அவன் எய்த்தமை - அந்த மனத்தை அவாக் கொள்ளாதவாறு தன் முயற்சியாலே தான் அடக்கி அடக்கிப் பார்த்து இயலாது இளைத்தமை. இனிக் களிறுகள் இளைத்தமை - மனம்தான் அவாவிய புலன்களை அடைந்து அடைந்து நிறைவுபெற விரும்பி, நிறைவு கூடாமையால் வெறுப்புற்றமை. இந்நிலையிலே அந்த மனம் திருந்தி நிறைவு பெறுதற்கு வழி சிவயோகத்தைத் தவிர வேறொன்றில்லாமை அறியப்பட்டது.
Special Remark:
ஆதல் - மிகுதல். அஃது இங்கு அளவின் மிகுதலைக் குறித்தது. இரண்டாம் அடியில், `மதத்தால்` எனவும், ஈற்றடியில் `யோகினால்` எனவும் உருபு விரிக்க. ``யோகு`` என்பது தமிழ் முறையில் முதனிலைத் தொழிற்பெயராய் வரும். யோகம், இங்குச் சிவயோகமேயாம். `திருந்துதல்` என்பதன்பின் `ஒழிய` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. `ஒன்றையும்` என உருபும், இழிவு சிறப்பும்மையும் விரிக்க. `ஐந்திந்திரியங்களை அடக்குதல் சிவ யோகியர் சிலராலல்லது ஏனையோரால் கூடாமையும், சிவயோகத்தை எய்துதல் பலர்க்குக் கூடாமையும் நோக்கின் ஐந்திந்திரியங்களை அடக்குதற்கண் உளதாய அருமை விளங்கும் என்பது கருத்து.
இதனால், இங்கு எடுத்துக் கொண்ட பொருள் முதற்கண் இனிது புலப்படுத்தப்பட்டது.