ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 5.தவம்

பதிகங்கள்

Photo

சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தஅப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.

English Meaning:
Inward Look of Tapas Ends Birth

Come apart from the clever argumentation of contending theology,
And for a brief brief while, look inward,
That one look shall drive the nail into the coffin of birth
And forever end its cycle recurring.
Tamil Meaning:
`நூல்களை ஓதுவதே பெருமை` எனக் கருதும் கருத்தை விடுத்து, நீவிர் ஒரு மாத்திரை காலமாயினும் அறிவை அக முகப்படுத்தி அறிவினுள் நிற்கும் அறிவை நோக்குங்கள்; அந்நோக்கம் பச்சை மரத்தில் அறையப்பட்ட ஆணி அதனுள் நன்கு பதிந்தாற்போல நும் அறிவுனுள்ளே நன்கு பதிய தொன்று தொட்டு உடம்பைப் பிணித்து வருகின்ற பிறப்புச் சேயதாக உம்மை விட்டு ஓடிவிடும்.
Special Remark:
``சதுர்`` என்றது, ஓதுவாரது கருத்தினைக் கொண்டு கூறியது. கல்விக்குப் பயன் ஒழுக்கமேயாதலின், அஃது இல்லாத கல்வியை விடுக என்றார். மறித்தல் - வெளிச்செல்லுதலைத் தடுத்தல். உள் - அறிவினுள். நோக்குதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது `போல்வதாக` எனப்பொருள்தரும் `போல` என்னும் செய வெனெச்சத்து அகரம் தொகுத்தல் பெற்றது இவ்வாறு உரையாது, `அகலவிட்டோட்டுமே` எனப்பாடம் ஓதிக்கொள்ளலுமாம். `தொன்று தொட்டு விடாது வரும் பிறவிக்குக் காரணம் அறிவைப் பண்டே பற்றியுள்ள இருள்மலமாகலின், அஃது அப்பார்வையால் அகலப் பிறவியும் அகலும்` என்றவாறு.
இதனால், தவம் மலத்தை நீக்குதல் வாயிலாகப் பிறவியை அறுத்தல் கூறப்பட்டது.