ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 5.தவம்

பதிகங்கள்

Photo

எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்துச் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவ ரேயல்லால்
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.

English Meaning:
Only the Blessed Know Greatness of Tapas

The mystery of life, the origin of earth,
The might of pure deeds of tapas
Who knows them all
But they that receive Lord`s Grace?
The rest know naught of tapas supreme.
Tamil Meaning:
நமது அரிய உயிருணர்வும், அவ்வுணர்விற்கு இன்றியமையாததாய் உள்ள உலகம் உண்டாகி நிற்பதும், அங்ஙனம் நிற்குங்கால் அதன்கண் நிகழற்பாலதாய செவ்விய பெரிய தவச் செய லின் சிறப்பும் ஆகிய யாவும் இறைவன் திருவருளை அடிநிலையாகக் கொண்டனவேயாம். அதனால், `இத்தவத்தன் இயல்பு இது` என்பதை யும் அவ்வருளைப் பெற்றவரல்லது பிறர் அறிய மாட்டார்.
Special Remark:
``உயிர்`` என்றது அதன் உணர்வையேயாதல் அறிக. ``தோற்றம்`` என்றது, அதனபின்னதாகிய நிலையையும் உணர நின்றது. செவ்விய பெரிய தவமாவது வீடுபயக்கும் தவம். அஃது இறைவனை வழிபடுதலேயாம். `உண்மைத் தவமாவது இறை வழி பாடே என்பதை உணர்தலும் திருவருளின்றியாகாது` என்பது உணர்த்துகின்றவர், அதற்கு ஏதுவாக அனைத்தும் திருவருளை திருவருளை முதலாகக் கொண்டமையை முன்னர் உணர்த்தினார். திருவருளை முதலாகக் கொண்டவற்றை ஒற்றுமை பற்றி, ``திருவருள்`` என்றே கூறினார். `அது பெற்றவரே யல்லால்` என வேறு தொடராக்கி யுரைக்க. திருவருள் பெறாதவர் பிறவற்றையே `தவம்` என மயங்கி அல்லலுறுதலை நினைக.
இதனால், உண்மைத் தவம் உணர்தற்கரிதாதல் கூறப்பட்டது.