ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 5.தவம்

பதிகங்கள்

Photo

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.

English Meaning:
Tapas Alone is Imperishable Wealth

Amidst the tumult of raging hatred, they perished,
The kings, their ministers and their elephantine hordes;
But fixing their sights on divine Jnana and universal love,
The tapasvins immortals became, their eyelids batting not.
Tamil Meaning:
உலகில் நுண்ணறிவுமிக்க அமைச்சராய் விளங்கி னோரும், போரில் வலிமிக்கு விளங்கிய யானைகளது கூட்டமும், ஆணையால் உயர்ந்து அரசராய்ப் பொலிந்தோரும் பிறர்மேல் பகைத்துச் சென்ற போரில் இறந்தாராய் ஒழிய, அவர்கள் நடுவிலே, தவத்தவராயினார், சிவன் உயிர்கட்குப் பொருந்த வைத்துச் சொல்லிய ஒப்பற்ற உண்மை ஞானத்தையும், அதனால் அடையப்படும் வீடு பேறாகிய உறுதிப்பொருளையுமே பொருளாக நோக்கி, கண் இமைத்தலும், அழிதலும், இல்லாத அமரராய் விளங்கினார்.
Special Remark:
திணை விராய் எண்ணிய வழி, ``பட்டார்``, என உயர் திணையான் முடிந்தது. `பட்டாராக அவர் நடுவே என ஒரு தொடர் படுத்துக. `தவம் ஒழிந்த பிற யாவும் அழிதலுடையனவே` என்பது முன்னிரண்டடிகளில் விளக்கப்பட்டது. இரண்டாமடி உயிரெதுகை.
இதனால், தவம் நிலைபேற்றைத் தருவதாதல் கூறப்பட்டது.