ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 5.தவம்

பதிகங்கள்

Photo

இருந்து வருந்தி எழிற்றவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே எவரே எனினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.

English Meaning:
Tapasvins Remain Impervious to Temptations

Transfixed in mind and tortured in body
Stout of heart, they perform tapas splendorous;
Even though the Celestial King
And others, however mighty, descend to them,
And tempt them,
Their determined thought on Siva firm remains.
Tamil Meaning:
பொறி புலன்களை அடக்கியிருந்து, உண்டி சுருக்கல் முதலியவற்றால் மெய்வருந்தி உயர்ந்த தவத்தைச் செய்து நிற்கும் பெரி யோரை மனம் கலங்கச் செய்வதற்கென்றே தமது இருப்பை வைத்து, இந்திரனேயாக, ஏனை எத்தேவரேயாக எதிர் வரினும் அப் பெரி யோர்க்கு அவர்தம் உள்ளம் சிவனிடத்தே அசையாது அழுந்தி நிற்கும்.
Special Remark:
`அத்தகையோர்க்கே தவம் முற்றுவது` என்றவாறு.
``தவமும் தவமுடையார்க் காகும்; அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது``*
எனத் திருவள்ளுவரும் கூறினாராகலின், இப் பெருந்தன்மை யாளர், முற்பிறப்பில் தவம்செய்து பயின்றவர் என்க. தவத்தில் நின்றோர் பலரை இந்திரன், மாயோன் முதலியோர் மயக்கத்துட்படுத்து அவரது தவங்களை நிலைகுலையச் செய்தமை புராண இதிகாசங்களுட் கேட்கப் படுதலை உட்கொண்டு இவ்வாறு கூறினாராயினும், `தவத்தை இடையறு விப்பது உண்மையில் அவரது முன்னை வினையே` என்பதும், `அத் தன்மையாவனவினை, பல பிறப்புக்களில் முதிர்ந்து வரும் தவத்தின்முன் தன் வலிமைகெட்டொழியும்` என்பதுமே கருத்தென்க.
இதனால், தவம் பல பிறவிகளில் தொடர்ந்து நிகழ்ந்தே முற்றுதல் கூறப்பட்டது.