ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்

பதிகங்கள்

Photo

திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரிதை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இரும்மன்னும் நாடோறும் இன்புற் றிருந்தே.

English Meaning:
Kriya Comes of Chariya

Hearken! You, worldly men
That stand in Chariya Path,
It leads to the Kriya Path,
That exalts you;
Then shall your primordial Pasas lie prostrate,
And you live in unending bliss for ever.
Tamil Meaning:
மக்கள் உடம்பிற் பொருந்தி வாழ்கின்ற உலகத் தவரே! சிவனாகிய தந்தைதன் செல்வத்தில் பொருந்தி வாழ்தற்குரிய சற்புத்திர மார்க்கத்தின் மரபினைக் கூறுகின்றேன்; கேளுங்கள். பிறவிக்கு ஏதுவாய் நிலைபெற்றிருக்கின்ற ஆணவ மலம் தனது செயல் மடங்கி நிற்குமாறு உங்கள் இருகைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து குவியும் படி சிவனைத் தொழுது, என்றும் இன்பத்திலே பொருந்தியிருங்கள்.
Special Remark:
``கைகூம்ப`` என்பதனை இரட்டுற மொழிந்து பாசத்திற்குச் `செயல் மடங்க` எனவும், தொழுவார்க்கு, `கைகள் குவிய` எனவும் உரைத்துக் கொள்க. கை செயலாதல், `கையறுதல்` என்னும் சொற் பற்றியும் அறியப்படும். ஆணவம் செயல் மடங்குதல் ஆவது, தன் சத்தி மடங்கி நிற்றல். தொழுதல், மலர் தூவித் தொழுதலாம். இதனை, ``கைகாள் கூப்பித் தொழீர்;- கடி - மாமலர் தூவி நின்று``1 என்பதனாலும் அறிக. `இது செய்யாதார் வாளா பொழுது போக்குபவராவார்` என்பதை,
``தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே`` 2
என்னும் நாவக்கரசர் திருமொழியால் உணர்க. ஈற்றடியில் உள்ள `மன், உம்` அசைகள். ``உற்றிருந்து`` என்பது ஒரு சொல்.
இதனால், சற்புத்திர மார்க்கத்தது முறையும், பயனும் சுருங்கக் கூறி, அது வலியுறுத்தப்பட்டது.