ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்

பதிகங்கள்

Photo

மேவிய சற்புத் திரமார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாம் சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன் மார்க்கந் தெளிவதே.

English Meaning:
Path of Filial Piety Leads to Jnana

The Path of Filial Piety is the Way of Kriya true;
The Kriya Path leads to Yoga Path;
Transcending both,
And uniting in Sakti of Yoga State
Indeed is consummation of Sanmarga Path.
Tamil Meaning:
விரும்பப்படுகின்ற சற்புத்திர மார்க்கமாகிய கிரியை யாவது, அகத்தில் மட்டுமன்றிப் புறத்திலும் ஒளிவடிவில் சிவனை நிறுத்தி முகம் முதலிய உறுப்புக்களை நினைவால் (பாவனை யால்) கண்டு பல முகமன்களும் (உபசாரங்களும்) செய்து வழி படுதலாம். சகமார்க்கமாகிய யோகமாவது, உலகத்தோடு ஒட்டி நிகழும் முகமன் நிகழ்ச்சிகள் `அகம், புறம்` என்னும் இரண்டிடத்தும் நிகழ்தலாகிய அத்தன்மை இன்றி, யோகத்தில் வெளிப்படும் யோக சத்தியை அகத்தில் கண்டு, அதனோடு ஒன்றாதலாம். அனைத்தினும் மேலான சன்மார்க்கமாவது, தெளிவான ஞானமேயாகும்.
Special Remark:
`உண்மை ஞானம் சன்மார்க்கமாய் நிற்க, உடனாய் நிகழும் திருவருளோடு கூடுமாற்றால் யோகம் சகமார்க்கமாதலின், அவ் இரண்டிற்கும் முன்னே நிகழும் ஒளியுருவ வழிபாடு சற்புத்திர மார்க்கமா யிற்று` என்பதாம். ஆகவே, இக்கருத்து இனிது விளங்குதற் பொருட்டே சகமார்க்க சன்மார்க்கங்களின் இயல்புகள் இங்கு எடுத்துக் காட்டப் பட்டன என்பது விளங்கும். சற்புத்திரமார்க்கம் - மகன்மை நெறி - அல்லது - மைந்தர்நெறி. மகன் தந்தைக்கு வேண்டும் உபசாரங் களை அணுக்கமாயிருந்து அவனது மெய்யைத்தீண்டி அன்புடன் செய்தல் போலச் செய்தலே கிரியையாதல் அறிக. `அகல நின்று செய்யும் புறம்படித் தொழில்கள் சரியையாக, அணுகி நின்று செய்யும் அகம்படித் தொழில்களே கிரியை` என உணரலாம். `கிரியைக்கு உரியது அருவுருவத்திருமேனி` என்பது ``தாவிப்பது`` என்றதனால் பெறப்படும்; என்னை? உருவத் திருமேனியாயின், வழிபடும் பொழுதெல்லாம் தாவித்து வழிபடல் வேண்டாமையின். இங்ஙனம் செய்யும் அருவுருவ வழிபாடு பின்னர் அருவ வழிபாடாகிய யோகத்தில் செலுத்த வல்லதாகும். அதனானே, கிரியையில் அக வழிபாடும் ஒரு பகுதியாய் நிகழ்கின்றது. அருவுருவத்திருமேனி அல்லது ஒளியுருவமாவது இலிங்க வடிவாம்.
``மெய்த்தொழில்`` என்றது `கிரியை` என்றவாறு, ``சகத் தொழில்`` என்பது, `உலகியலோடு ஒத்த மார்க்கம்` என்னும் பொருட் டாய்ப் பல முகமன் செயல்களை உணர்த்திற்று. இரண்டு - அகம், புறம். `இரண்டினும் ஆவது அகன்று` என்க. `சகமார்க்கம் ... ... ... இரண்டும் அகன்று ... ... ... தேவியோடு ஒன்றல்` என இயையும்.
இதனால், கிரியை சற்புத்திர மார்க்கம் ஆமாறு ஏனைய வற்றோடு வைத்துக் காட்டி விளக்கப்பட்டது.