ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்

பதிகங்கள்

Photo

உயர்ந்தும் பணிந்தும் உகந்தும் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயன்அது வாகும்
பயந்து பரிக்கிலர் பால்நவை யாமே.

English Meaning:
Adore Lord in Diverse Ways; He Shall Be Yours

Rise high, bend low, kiss and embrace Lord;
Praise Him, sing Him and pray at His Holy Feet;
That shall your birth`s fulfilment be;
In trembling love do adore Him;
He, indeed, shall be beloved unto you.
Tamil Meaning:
அரனது திருவடிகளின் நேரேநின்றும், வீழ்ந்தும், மனம் விரும்பியும், கைகளால் பிடித்தும், புகழ்ந்தும் முறைப்படி வழிபாடு செய்யுங்கள். அம்முறையீடு உலகப் பயனையும் தருவதா யினும், மானுடப் பிறப்பின் பயனாகிய வீடு பேற்றைத் தருவது அஃது ஒன்றே, ஆதலின், அதனை மேற்கொள்ள அஞ்சி ஒழிவாரிடத்தில் குற்றம் வந்துதங்குவதாம்.
Special Remark:
``தழுவி`` என்புழியும் எண்ணும்மை விரிக்க. ``முறை`` என்பது அதன் வழிபட்ட செயலைக் குறித்து. `விதி` என ஓதினுமாம். பிறவற்றைப் பயந்தும், என்பது ``பிறவிப் பயன்`` என்றதனால் போந்தது. ஈற்றடியைப் பிறவாறும் பாடம் ஓதுவர்.
இதனால், கிரியை இறைவன் மைந்தராகிய மக்கட் பிறப்பினர் யாவரும் தவறாது மேற்கொள்ளற்பாலதாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.
``யாவர்க் குமாம்இறை வற்கொரு பச்சிலை`` 1
என இந்நாயனாரும்,
``உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணாராகில் ... ... ... ...
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே`` 2
என்று திருநாவுக்கரசு நாயனாரும் அருளினமை அறிந்து போற்றற் குரியது.
``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம்விரும்பும்
உண்மை யாவது பூசனை என உரைத்தருள`` 1
என்றே சேக்கிழாரும் கூறினார்.