ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்

பதிகங்கள்

Photo

அருங்கரை யாவ தரனடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை
வருங்கரை ஏகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாய்உல கேழின் ஒத்தானே.

English Meaning:
Lord is Our Defence and Refuge

His Holy Feet are our Rock of Refuge,
His commandments, our defence`s battlements;
He is verily the finite Shore
For the surging tide of Jivas on earth;
He pervades thus, the seven worlds alike.
Tamil Meaning:
பிறவிக் கடலுக்கு காணுதற்கு அரிய கரையாய் உள்ளது அரனது திருவடி நிழலே. உலகில் உயிர்கள் ஒழுக வேண்டிய நெறிமுறையாகச் சொல்லப்படுவது அவனது ஆணையே. அவ் வாணையின்வழி அவனது திருவடி நிழலாகிய கரையை நோக்கிச் செல்கின்ற உயிர்கள் பலவற்றிற்கும் தொகை நிலையாய் அமைந்த ஒரு பேரரசினை உடையவனாய், அனைத்துலகின் மேலும் கோட்டம் இன்றி ஒருபடித்தான கருணையையே யுடையவனாய் அரன் இருக்கின்றான்.
Special Remark:
ஆகவே, `உயிர்கள் யாவும் அவ்வரசன் மைந்தரே யாய் இருந்தும், அதனை அறியாமல் மயங்குகின்றன` என்பதாம்.
``மன்னவன்றன் மகன்வேட ரிடத்தே தங்கி
வளர்ந்தவனை யறியாது`` 1
என்றமை காணத்தக்கது. `உயிர்களாகிய மைந்தர்க்கெல்லாம் பெரு நிலையையும், பெருநலத்தையும் தருகின்ற பேரரசத் தந்தை அரன்` என்பது கூறுவார், `அவனது திருவடி நிழலே உயிர்கள் அடையும் இடம்` என்பதும் அதனை அடையுமாறும் உடன் கூறினார். `அவ்வடி நீழல்` என்பது பாடமன்று. `பெருங்கரை` என்பதில் கரை. `வரம்பு` என்னும் பொருளாய், ஒழுகும் நெறியைக் குறித்தது. அந்நெறியை இறைவன் தன் ஆணையாக வகுத்து வைத்திருத்தலை இரண்டாம் அடியிற் குறித்தார்.
``பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி` 2 எனத் திருவள்ளுவரும் கூறினார். `அரசாய்` என்பது, `அரைசாய்` எனப் போலியாய்ப் பின், `அரையாய்` என நின்றது.
இதனால், எஞ்ஞான்றும் உயிர்கள் இறைவன் மைந்தராய் இருக்கும் உரிமையுடைமையின் கிரியை இளமைக் காலத்தில் மறந் தொழியினும் பின்னராயினும் அறிந்து மேற்கொள்ளுதற்கு உரித்தாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.