ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

ஆறிரு பத்துநால் அஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறிநீர் உம்மில் சிவாய நமஎன்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.

English Meaning:
Chant Five Letters as Form of Fifty-One Letters

The Letters Fifty and One
There remained in form different
Chant Si Va Ya Na Ma pure there
Nothing will you lack then.
Tamil Meaning:
எட்டு எட்டு(8X8) அறுபத்து நான்கு அறைகள் உள்ள இச்சக்கரத்தில் சுற்று வீதியில் உள்ளவை இருபத்தெட்டு, நடு வில் உள்ளவை நான்கு ஆக முப்பத்திரண்டுடன் திசைக்கு இரண்டாக நான்கு திசைகளிலும் இடைவெளியாக நிற்கும் அறைகள் எட்டுக் கூட அறைகள் நாற்பது. நடுவு நான்கு அறைகளின் நடுவையும் ஓர் அறை யாகக் கொள்ள, கூடிய அறைகள் நாற்பத் தொன்று இவைகளில்.
உடலெழுத்துக்களில் ஐவருக்கத்து இருபத்தைந்தையும் இருபத்தைந்து இலிங்கங்கட்கும் உரிய எழுத்துக்களாக நடுவண் ஐந்தில் தென்கிழக்கு முதலாகத் தொடங்கிப் பின் மேற்கு முதலாக வலஞ்சென்று இலிங்கங்கட்கு அணியவான கீழ் அறைகளில் அடைத்தல் வேண்டும். பின்னர் யகரமாதி நான்கு, ‹ கரமாதி நான்கு ஆக எட்டினையும் சுற்று வீதியில், இடைவெளியாக உள்ள எட்டு அறைகளில் மேற்கு முதல் வலமாக அடைத்து, உட்சென்று வெற்றிடமாய் உள்ள எட்டு அறைகளில் முறையே, `ள, க்ஷ, ஓம், சி, வா, ய, ந, ம` என்னும் எட்டு எழுத்துக்களையும் அடைத்து நிரப்பிச் செபித்தல் வேண்டும். செபிக்கின் குறையின்றி வாழலாம்.
Special Remark:
ஆறு + இருபது + நால் + அஞ்சு = முப்பத்தைந்து. இரண்டாவது அஞ்சு, திருவைந்தெழுத்து, `வேறு உருவாகக் கொண்டு` என ஒருசொல் வருவிக்க. உம்மில் கூறுமின் - வாய்க்குள் மெல்லெனச் செபியுங்கள். அஞ்செழுத்துக்களையே எடுத்துக்கூறினாராயினும் ஓங்காரமும் இயல்பாகக் கொள்ளப்படும்.
ஐவருக்கத்தது இருபத்தைந்து எழுத்துக்களும் மகேசுர எழுத்துக் களாய் நிற்றல் வெளிப்படையாக அறியப்படவே, பிரணவத் தோடு கூடிய திருவைந்தெழுத்து, சதாசிவ எழுத்தாதல் குறிப்பால் அறியப்படும். இவை இருதிறத்தனவும் இங்ஙனமாகவே, இவற்றிற்கு இடைநிற்கும் யகாராதி பத்தும் ஆன்ம எழுத்துக்களாய் ஆன்மாவை மகேசுரர், சதா சிவர் இருவர்களிடை வைத்துக் கீழ் நின்று மேல் ஏற்றுவனவாம் என்க.
ஏரொளிச் சக்கரம் பிரணவயோக சக்கரமாய் முழுவதும் உயிரெழுத்துக்களாலே அமைதலும், இது சாம்பவ யோக சக்கரமாய் முழுவதும் உடலெழுத்துக்களாலும் திருவைந்தெழுத்தாலும் அமைதலும் கண்டு கொள்க.
இவை நான்கு மந்திரங்களாலும் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் அமைப்புக் கூறப்பட்டது. இவ்வாற்றால் அமைந்த இச்சக்கர வடிவைக் காண்க.
இதில் உள்ள எழுத்துக்களைக் ககாரம் முதலாக ஒவ்வொன் றனையும் பத்துப் பத்து உருச் செபித்து, முடிவில் திருவைந் தெழுத்தையும் அவ்வாறு செபித்தல் ஒருவட்டமாகும் என்பது மேலை அதிகாரத் தொடர்ச்சியால் விளங்கும். ஏரொளிச் சக்கர வழிபாடு ஞானசாதனமும், இது போக சாதனமும் ஆகும் என்க. இம் மந்திரத்துள், \\\"குறைகளும் இல்லையே\\\" என்றது போகம் பற்றிய குறிப்பேயாம்.